Skip to main content

ஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான்: கருணாநிதி

சென்னை பெரம்பூர் லோக்கோ ஓர்க்ஸ் கூடுதல் மேம்பாலம் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:

இந்த விழா நிகழ்ச்சியில் பாலத்தின் அருமையையும், பாலங்களுடைய வரலாறுகளையும் எனக்கு முன்னால் பேசிய நம்முடைய துணை முதலமைச்சர் தம்பி ஸ்டாலின் அவர்களும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தம்பி தயாநிதி மாறன் அவர்களும், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களும் மிக விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.



இந்த மேம்பாலங்கள் சென்னைக்குத் தேவை என்பதை நான் இன்று நேற்றல்ல - சில ஆண்டுகளுக்கு முன்பல்ல -  50 ஆண்டுகளுக்கு முன்பே அனுபவத்தால் உணர்ந்தவன்.    சென்னையிலே வாழ்வதற்காக நான் குடும்பத்தோடு இங்கே குடிவந்து கோடம்பாக்கத்திற்குப் பக்கத்திலே ஒரு காலனியிலே நான் வாழ்ந்த காலத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் அடிக்கடி என்னுடைய வீட்டிற்கு வருவதும், அவரும் நானும் அவருடைய காரிலோ அல்லது வேறு பட நிறுவனங்களின் காரிலோ ஏறிக்கொண்டு அங்கிருந்து, கோடம்பாக்கத்திலிருந்து இந்தப் பகுதியில் உள்ள ஸ்டூடியோக்களுக்கு, பட நிறுவனங்களுக்கு வருவதும் வழக்கம்.

இப்படி, கோடம்பாக்கத்திற்குப் பக்கத்திலே ‘‘ஜக்கரியா காலனி’’ என்று ஒரு காலனி இப்போதும் இருக்கிறது.    பல மாறுதலுக்கு உள்ளாகி அது வாழ்ந்து கொண்டிருக்கிறது.  அந்தக் காலனியில் நான் இருந்தபோது, இன்றைக்கு துணை முதலமைச்சராக - முன்னாள் சென்னை மேயராக இருக்கின்ற -  இருந்த தம்பி ஸ்டாலின் அவர்கள் குழந்தை.  நான் சொல்கின்ற கதை 55 ஆண்டுகள் கதை.  அவர் அப்போது குழந்தை.  நான் இப்போது கிழவன்.

ஒருநாள் திடீரென்று என் வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்துக் கொண்டு என் மனைவியும், என் சகோதரிகளும் ‘‘ஓடிவா!  ஓடிவா!’’ என்று அழைத்தபோது,  நான் அப்போதுதான் கலைவாணரோடு புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.  என்னவென்று கேட்டால், ‘‘குழந்தை ஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான். அதை எடுக்க முடியவில்லை’’ என்றார்கள். நான் உள்ளே ஓடிப்போய், ‘‘வாயைத் திற’’ என்றேன்.  வாயைத் திறந்தால், அதற்குள் அந்த ஊக்கு வயிற்றுக்குள் போய்விட்டது.    அதுவும் எப்படிப்பட்ட நிலையில் என்றால், ஊக்கு திறந்த நிலையில் வயிற்றுக்குள் போய் விட்டது என்றதும் எல்லோரும் பயந்தோம், துடித்தோம்.  எப்படி அதனை எடுப்பது என்று புரியாமல், டாக்டர் வீட்டிற்குப் போகலாம் என்று என்.எஸ்.கே. காரில் புறப்பட்டு வந்தால், அந்தக் கோடம்பாக்கம் கேட் பூட்டப்பட்டிருந்தது.  அதைத் தாண்டித்தான் வரவேண்டும். அப்போதெல்லாம் சென்னையிலே இப்படி கேட் பூட்டப்பட்டால் அரை மணிநேரம், கால்மணி நேரம் டிராபிக் நின்று, அதற்குப் பிறகுதான் புறப்பட முடியும்.  அந்த அரைமணி நேரத்திற்குள் என்ன ஆகுமோ என்று நாங்கள் கவலைப்பட்ட போது, குழந்தை வலி பொறுக்க முடியாமல் அழத் தொடங்கிவிடவே, பக்கத்திலே உள்ள டாக்டர்களைப் போய் பார்க்க காரில் செல்ல முடியாத நிலை.

பிறகு  அங்கிருந்த டாக்டரை அழைத்து வந்து பார்க்கச் சொன்னோம்.  டாக்டர் வருவதற்குள்ளாக ஊக்கு உள்ளே போய்விட்டது.  நல்ல வேளையாக ஊக்கு திறந்த நிலையில் உள்ளே சென்றிருந்தால் வயிற்றைக் கிழித்திருக்கும். அப்படிக் கிழிக்காமல் அப்போதே ஜாக்கிரதையாகக் குழந்தைப் பருவத்திலேயே அவ்வளவு லாவகமாக, ஊக்கை விழுங்கியபோது கூட ஒழுங்காக விழுங்கிய காரணத்தால் பெரிய ஆபத்து ஏற்படவில்லை.

அப்போதுதான் நினைத்துக் கொண்டோம்.  இந்த ரயில்வே கேட் ஒரு பாலம் இல்லாத காரணத்தால் எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது.  இப்படி எத்தனை குழந்தைகளுக்கு, எத்தனை நோயாளிகளுக்கு இந்த கேட்  இடையூறாக இருந்திருக்குமோ என்றெல்லாம் எண்ணியதுண்டு.  அப்போது நான் எந்த அதிகாரத்திலும் இல்லை.  நம்முடைய கழகமோ மாநகராட்சி மன்றத்திலும் கூட இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான எந்தக் காரியத்தையும் செய்யக்கூடிய அதிகாரம் இல்லை, செல்வாக்கும் இல்லை, வாய்ப்பு வசதியும் இல்லை.  ஆனால், ஆர்வம் மாத்திரம் இருந்தது.

அந்த ஆர்வம் பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையிலே இந்த ஒரு ரயில்வே கேட் கோடம்பாக்கத்தில் மாத்திரமல்ல, நியூட்டன் ஸ்டூடியோவிற்குப் பக்கத்தில் ஒரு ரயில்வே கேட் இருந்தது.  இன்னும் பல இடங்களில், நான்கைந்து இடங்களில் இதுபோன்ற தடைகள் இருக்கின்ற காரணத்தால் போக்குவரத்து நெரிசல், நோயாளிகளுக்கு இடைஞ்சல், உடனடியாக அவசர வைத்திய உதவியைப் பெற முடியாத தொல்லை -  இவைகள் எல்லாம் நீடித்துக் கொண்டே இருந்தது.

அதன் பிறகுதான் 1971-72ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பேரறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பின்னர் நான் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றிருந்தபோது, மேம்பாலங்களைத் தமிழகத்தில் பல இடங்களில் நிறுவ வேண்டும் என்ற  ஆக்கப்பூர்வமான யோசனை பொறியாளர்களால் வெளியிடப்பட்டு, அப்படிப்பட்ட யோசனைகளில் முதல் காரியமாக சென்னையிலே அப்போது மவுண்ட் ரோடு -  இன்றைக்கு அண்ணா சாலை -  அந்த அண்ணா சாலையிலே முதன்முதலாகத் தொடங்கப்பட்ட அந்தப் பாலம்தான் அண்ணா மேம்பாலம்.  இன்றைக்கும் இந்தியாவிலே பொதுவாக தென்னகத்திலே மேம்பாலம் ஒன்று பெரிய அளவிலே கட்டப்பட்டது என்றால், அது முதன்முதலாக சென்னை மாநகரத்திலே கட்டப்பட்ட அந்த மேம்பாலம்தான்.  
அதற்குக் கூட ஒரு கதை இருக்கிறது.

பவளவண்ணன் என்று ஒருவர் இருந்தார்.  உங்களுக்குத் தெரியும்.  இந்த இயக்கத்தின் இரும்புத்தூண்.  இந்த இயக்கத்தின் நாடி நரம்புகளிலே ஒருவர்.  அந்தப் பவளவண்ணன் ஒருநாள் இப்போது அண்ணா மேம்பாலம் இருக்கிறதே, அதே இடத்தில் ஜெமினி ஸ்டூடியோவிற்கு முன்புறமாக நான் ஊரில் இல்லாத நேரத்தில் திடீரென்று ஒரு பீடத்தை அங்கே கட்டிவிட்டார்.  அது என்ன பீடம் என்று பார்ப்பதற்குள்ளாக அவரே அறிவித்து விட்டார்.  இங்கு கருணாநிதியின் சிலையை வைக்கப் போகிறோம் என்று.  இன்னும் வேடிக்கை!  அண்ணா அவர்கள் அந்த இடத்தைப் பார்த்து விட்டு என்னிடத்திலே சொன்னார், ‘‘உனக்காக சிலை வைக்கப் பார்க்கப்பட்டிருக்கிற இடம் -  அந்த இடம் ரொம்ப நேர்த்தியாக இருக்கிறது.  பலரும் பார்க்கத்தக்க நல்ல இடம்.  பவளவண்ணன் கெட்டிக்காரன்.  நல்ல இடமாகப் பார்த்திருக்கிறான்.’’ என்று சொன்னார்.  எனக்கு ஆச்சரியம்.  திடுக்கிட்டேன்.    நான் போய் அந்த இடத்தைப் பார்த்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக அந்த இடத்தை இடிக்க வேண்டும் என்று கழகத் தோழர்களிடத்திலே சொல்லி, அவர்களும் அந்தப் பீடத்தை இடித்தார்கள்.

எனக்குச் சிலை வேண்டாம்.  ஏனென்றால் எந்தச் சிலை வைத்தாலும் எதிர்காலத்திலே இங்கு போக்குவரத்திற்காக கட்டப்படவிருக்கிற ஒரு பாலம் தடைபட்டு விடும்.  ஆகவே, ஜெமினிக்கு எதிரே அந்தப் பாலத்தைக் கட்ட வசதியாக -  வாய்ப்பாக -  உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என்று  பவளவண்ணனை அழைத்து ஆணையிட்டேன். தம்பி சைதை கிட்டு இங்கே இருக்கிறார்.    அவருக்கு அந்தக் கதை யெல்லாம் தெரியும்.   ஏன் சொல்கிறேன் என்றால், போக்குவரத்து வசதிக்காக என் சிலையே வைக்கக்கூடாது என்று அன்றைக்கு ஆணையிட்ட நான், சென்னையிலே போக்குவரத்து வசதியை அதிகப்படுத்த என்னென்ன செய்திருக்கிறேன் என்ற அந்தப் பட்டியலைத்தான் இங்கே தம்பி ஸ்டாலினும், தம்பி தயாநிதி மாறனும் படித்துக் காட்டினார்கள்.

மக்களுடைய வசதிக்காக பலர் தங்களுடைய சொந்த சுகதுக்கங்களைத் துறந்து விட்டு, மக்களுடைய வசதிக்காகப் பாடுபட வேண்டும்.  அதை கவனிக்க வேண்டும் என்று பாடுபட்டதன் அடையாளம்தான் - அதனுடைய வளர்ச்சிதான் இங்கே சுட்டிக்காட்டப்பட்ட இந்தப் பாலங்கள்.  குறிப்பாக, முதல்முதல் அண்ணா பெயரால் கட்டப்பட்ட அந்தப் பாலத்தையொட்டி சென்னையிலே எத்தனையோ மேம்பாலங்கள் வந்திருக்கின்றன.  மேம்பாலங்களால் எங்களுக்குப் புகழா, பெருமையா என்றால், மேம்பாலங்களால் எங்களுக்குக் கிடைத்தது - புகழ், பெருமை எல்லாம் உங்களிடமிருந்து.  ஆனால் அன்றைக்கு இருந்த அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்குக் கிடைத்தது ஜெயில்தான்.

இந்த மேம்பாலங்களைக் கட்டி அதிலே பல ஊழல்கள் புரிந்து விட்டார்கள் என்று ஊழலைத் தேடித் தேடி -  ஊழலைத் தங்களுடைய பாக்கெட்டிலேயே போட்டுக் கொண்டிருந்தவர்கள், அங்கே வந்து ஊழலைத் தேடிப் பார்த்தார்கள்.  நான் அந்தப் பக்கமாகச் செல்லும்போது கூட பார்த்திருக்கிறேன் -  ஒரு போலீஸ்காரர் கையிலே ஒரு சுத்தியலையும், உளியையும் வைத்துக் கொண்டு, அங்கு உள்ள பாலங்களையெல்லாம் தோண்டித் தோண்டிப் பார்த்துக் கொண்டிருப்பார்.  என்னவென்று கேட்டால், ஊழல் இருக்கிறதாம். ஊழலை பாலத்துக்கு அடியிலே நாங்கள் ஒளித்து வைத்திருப்பதாக அன்றைக்கு அவர்கள் கருதிக்கொண்டு, எங்களை சிறையிலே போட்டு விட்டு, சிறையிலே போட்டதை நியாயப்படுத்த அந்தக் காரியங்களையெல்லாம் அன்றைக்குச் செய்தார்கள்.  இதையெல்லாம் தாங்கிக் கொண்டு தம்பி சேகர் பாபு போன்றவர்கள் எல்லாம் அங்கே இருந்து இப்பொழுதுதானே மீண்டிருக்கிறார்கள்
.
பலருக்குத் தெரியும்.  தெரிந்தாலும் வெளியிலே சொல்ல முடியவில்லை.  காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.  இப்பொழுது அவர்களே இவர்களை வெறுக்கத் தொடங்கி, இவர்களும் அங்கு இருப்பதற்கான நியாயங்கள் கிடையாது என்பதைப் புரிந்து கொண்டு, வெளியேறிய பிறகு, இந்த உண்மைகளை அவர்களும் வெளியிடுகிறார்கள், நாமும் தெரிந்து கொள்கிறோம். ஆகவே, காலம் எந்த உண்மைகளையும் தன்னுடைய தொண்டையிலே போட்டு விழுங்கி விடாது. ஒருநாள் உண்மைகளை வெளியிட்டுத்தான் தீரும். அப்படிப்பட்ட உண்மைகளை இன்றைக்கு நாடு உணர்ந்து வருகின்றது.

நான் இங்கே சொன்னேனே, அந்தப் பாலத்திலே தொடங்கி 2006க்குப் பிறகு இப்பொழுது கூட வடக்கு உஸ்மான் சாலை - மகாலிங்கபுரம் சாலை மேம்பாலம்; உஸ்மான் சாலை - துரைசாமி சாலை சந்திப்பில் மேம்பாலம்; கோபதி நாராயண சாலை - திருமலை சாலை சந்திப்பில் மேம்பாலம்;  அடையாறு ஆற்றின் குறுக்கே, ஆலந்தூர் சாலையில் மேம்பாலம்; செனடாப் சாலை - டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பில் ஜி.கே மூப்பனார் மேம்பாலம்; ஜோன்ஸ் சாலை இரயில்வே சந்திக் கடவின் குறுக்கே வாகன சுரங்கப்பாலம்; பெரம்பூரில் அருமைக் கண்மணி முரசொலி மாறன் பெயரால் மேம்பாலம் -  என 134 கோடியே 87 இலட்ச ரூபாய்ச் செலவில் 7 பாலங்கள் 2006க்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன.

அது மாத்திரமல்ல, 1973ஆம் ஆண்டு நான் முதலிலே குறிப்பிட்ட அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம்; 1974ஆம் ஆண்டில் சென்னை ஆர்.கே. மடம் சாலையில் அமைந்துள்ள பாலம்; சென்னை அடையாற்றில் திரு.வி.க. பாலம்; சைதாப்பேட்டையில் மர்மலாங் பாலம் அகலப்படுத்தப்பட்டு, மறைமலை அடிகள் பாலம்; துரைசாமி சாலையில் மாம்பலம்-கோடம்பாக்கம் இரயில் நிலையங்களுக்கு இடையில் தீக்குளித்த தியாகி சிவலிங்கம் பெயரால் பாலம்; பேசின் பிரிட்ஜுக்கு அருகில் பக்கிங்காம் கால்வாயில் அமைந்த பாலமும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே மேம்பாலமும், 36 இலட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தப்பட்டது.

1989ஆம் ஆண்டில் அண்ணா சாலையில் பெரியார் சிலை அருகே கூவம் பாலம் அகலப்படுத்தப்பட்டு, பெரியார் பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது;  சென்னை விம்கோ நகர்-எண்ணூர் ரயில் நிலையங்களுக்கிடையில் 2.15 கோடி ரூபாய் செலவில் ஒரு ரயில்வே மேம்பாலம்;  1990ஆம் ஆண்டில் சென்னை-கல்கத்தா சாலையில் மூலக்கடை அருகில் பாலம்; 1999ஆம் ஆண்டில் நேப்பியர் பாலம் 5.11 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்பட்டது; ராயபுரத்தில் 17 கோடி ரூபாய் செலவில் 1010 மீட்டர் நீளமுள்ள பெரிய மேம்பாலம் -  இவைகள் எல்லாம் சென்னையிலே மாத்திரம் கட்டப்பட்ட மேம்பாலங்கள்.

மற்ற வெளியூர்களில் திண்டிவனம், மதுரை, காரனோடை, தருமபுரி, திருவாரூர், தஞ்சாவூர், சேலம், மேட்டூர் போன்ற இந்த வெளி நகரங்களில் எல்லாம் கழக ஆட்சிக் காலத்திலே ஏராளமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.  மிகப் பிரம்மாண்டமான பாலங்கள் எல்லாம் கட்டப்பட்டுள்ளன.

உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன்.  நான் முதல்முதலாக தேர்தலிலே நின்ற இடம் குளித்தலை.  அந்தக் குளித்தலையில் இரண்டு பக்கமும் நகரங்கள்.  ஒருபக்கம் குளித்தலை -  இன்னொரு பக்கம் முசிறி.  இடையிலே பெரிய ஆறு, கொள்ளிடம் ஆறு.  அந்த ஆற்றைத் தாண்டித்தான் குளித்தலையிலே இருந்து முசிறிக்குச் செல்ல வேண்டும், முசிறியில் இருந்து குளித்தலைக்கு வர வேண்டும்.   இப்படி குறுக்கே ஆறு இருந்த காரணத்தால் எப்பொழுதாவது படகுகளில் ஏறிக்கொண்டு மக்கள் காய்கறி வாங்க, சந்தைக்குச் செல்ல அக்கரைக்குச் செல்வார்கள்.  அதிலே பல நேரங்களில் விபத்துகள் ஏற்படும்.  பலர் பலியாவார்கள்.  சில ஓடங்கள் மூழ்கிவிடும்.  பலர் செத்து மடிவார்கள்.  இவைகளெல்லாம் தொடர் கதைகளாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்றால், குளித்தலையில் இருந்து முசிறிக்குச் செல்ல, திருச்சிக்குச் சென்று, திருச்சியில் இருந்து முசிறிக்குச் செல்ல வேண்டும் -  அதற்கு நாற்பது கல் தொலைவு சுற்றிவர வேண்டும்.  ஒருவர் குளித்தலையில் இருந்து முசிறிக்குச் சென்று, அங்குள்ள சந்தையிலே ஒரு சாமான் வாங்க, அல்லது அங்குள்ள சந்தையிலே ஒரு மாடு பிடிக்க ஒரு உழவன் கருதினால், அவன் நாற்பது மைல் தூரம் செல்ல வேண்டும், திருச்சியைச் சுற்றிக் கொண்டு. இந்த தூரத்தைக் குறைப்பதற்கும், இலகுவான பயணத்தை மேற்கொள்வதற்கும் நான் குளித்தலைத் தொகுதியிலே தேர்தலிலே போட்டியிட்டபோது அறிவித்தேன்,

‘‘நான் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிக் கொடுப்பேன்’’ -  என்று வாக்குறுதி அளித்தேன், அதன்படி நான் வெற்றி பெற்றேன். ஆனால், பாலம் கட்ட நான் எடுத்த முயற்சிகள் உடனடியாக வெற்றி பெறவில்லை, காரணம் அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள் ‘‘ஒரு எம்.எல்.ஏ.தானே நீ, உன்னுடைய கோரிக்கையை எப்படி நாங்கள் நிறைவேற்ற முடியும்’’ என்று அதைக் காதிலே போட்டுக்கொள்ளாமல் இருந்து விட்டார்கள். காலம் மாறும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.  பிறகு கழக ஆட்சி மலர்ந்தது. முதலமைச்சர் ஆனேன்.  முதல் பணியாக குளித்தலை தொகுதி மக்களுக்குத் தந்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுத்து அந்தப் பாலத்தை உருவாக்கினேன். அந்தப் பாலம் இன்றைக்கும் குளித்தலையையும், முசிறியையும் இணைக்கின்ற மிக நீண்ட, பிரம்மாண்டமான ஒரு பாலமாக இருப்பதை நீங்கள் காணலாம்.  இதையெல்லாம் சொல்லுவதற்குக் காரணம் -  நாம் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்பதற்கு இவைகள் எல்லாம் அடையாளம்.

அந்த அடையாளங்கள் சென்னை மாநகரத்திலே பல இருக்கின்றன.  இன்னும் பல வரப்போகின்றன.  தம்பி ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல -  அடையாறு பூங்கா, அதில் அன்றைக்கு நின்று பார்த்தோம்.  அதற்கு ‘‘தொல்காப்பியப் பூங்கா’’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம்.  அதைப் போலவே, நீங்கள் பலமுறை பார்த்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறீர்கள் - அந்த கால ஜெமினிக்குப் பக்கத்தில் -  இப்போதுள்ள அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் -  அதனை ஒட்டி ஒரு பூங்கா உண்டு -  பூங்கா என்றால் இலை, தழைகள், காடுகள்,  முட்புதர்கள் அடங்கிய ஒரு இடம்.  அதற்குள்ளே ஒரு ஓட்டல் இருக்கும். அதிலே போய் மாலை நேரத்திலே காற்று வாங்கிக்கொண்டு காபி சாப்பிடுவார்கள்.

அந்த இடம் ரொம்ப நாளாக என்னுடைய கண்ணை உறுத்திக் கொண்டே இருந்தது,  இந்த இடத்தை மாற்றி ஒரு பூங்காவாக மாற்ற வேண்டும் என்று!  என்ன பூங்காவாக ஆக்கலாம் என்று யோசித்து அதிகாரிகளைக் கலந்து பேசி, அவர்கள் கொடுத்த அபிப்ராயம், கருத்துகளின் அடிப்படையில், அந்த இடம் யாரிடத்திலே இருக்கிறது என்று பார்த்தால், அது வெகுநாட்களுக்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களால் யாருக்கோ கொடுக்கப்பட்டு விட்டது -  கிட்டத்தட்ட அவருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டதைப் போல, அந்த இடத்தில் நான்கு பேர் உட்கார்ந்து கொண்டு, ‘‘இது எங்கள் சொந்த இடம்’’ என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.  அந்த இடம் சுமார் 10 ஏக்கர் இருக்கும்.  சென்னையின் இருதயம் போன்ற இடத்தில் 10 ஏக்கர் இடத்தை வைத்துக் கொண்டு படாதபாடு படுத்திக் கொண்டிருந்தார்கள்.  நடக்கக்கூடாத காரியங்கள் எல்லாம் அங்கே நடந்து கொண்டிருந்தன.  அந்த இடத்தை நாம் கைப்பற்ற வேண்டும் என்று அரும்பாடுபட்டு, அது எந்த இடம், யார் யார் கையிலே இருந்தது என்பதெல்லாம் நம்முடைய சேகர் பாபுவிற்குத் தெரியும்   அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்று சட்டரீதியாக முயற்சி எடுத்து, டெல்லி வரையிலே, சுப்ரீம் கோர்ட் வரையில் சென்று அதற்காக வாதாடி, போராடி, அந்த இடம் கடந்த ஆண்டு மீண்டும் நம்முடைய சர்க்கார் வசம் ஆகிவிட்டது.  அரசு வசமாகி விட்டது.  அப்படி ஆனபிறகு, தொல்காப்பியப் பூங்கா என்று இன்றைக்கு அமைத்திருக்கிறோமே, அதற்கு முன்பே அதற்கு அச்சாரமாக அமைக்கப்பட்ட பூங்காவாக, ‘‘செம்மொழிப் பூங்கா’’ என்று அதை அமைத்திருக்கின்றோம்.

ஒருநாள் நான், ‘‘நாம் அமைத்த செம்மொழிப் பூங்காவைப் பார்த்து விட்டு வரலாம்’’ என்று மாலை 5 மணிக்கு அங்கே சென்றேன்.   செம்மொழிப் பூங்காவைப் பார்க்க பார்வையாளர்கள் வந்திருக்கிறார்களா அல்லது அதற்குப் பக்கத்திலே ஏதாவது தெப்ப உற்சவமா, தேரோட்டமா என்றே தெரியவில்லை. அந்த  அளவு பெரிய கூட்டம்.  ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு, ஒருவரைப் பிடித்து ஒருவர் தள்ளிக் கொண்டு போகின்ற அளவுக்கு மாபெரும் ஜனத்திரளை நான் அந்தப் பூங்காவிலே கண்டேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், இதைப் போன்ற பூங்காக்கள் நம்முடைய மேயர் சுப்பிரமணியன் முயற்சியினாலும், தம்பி ஸ்டாலின் முயற்சியாலும், மற்ற மாநகராட்சி உறுப்பினர்களின் முயற்சியாலும், சென்னை மாநகரெங்கும் நூற்றுக் கணக்கான பூங்காக்கள் இன்றைக்கு இருக்கின்றன என்றால், இதை முன்னிட்டுத்தான் அன்றைக்கே, ‘‘சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவோம்’’ என்று சொன்னோம்   முந்தைய ஆட்சியில் இதை ஏதோ ஒரு சிங்காரிக்குச் சொந்தமாக ஆக்குவதற்குத்தான் முயற்சித்தார்களே தவிர, சிங்காரச் சென்னையாக ஆக்குவதற்கு யாரும் முன்வரவில்லை.   திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான் அது ‘‘சிங்காரச் சென்னை’’ ஆக இன்றைக்கு ஆகியிருக்கிறது.  இல்லாவிட்டால், ஏதோ ஒரு சிங்காரியின் சென்னையாகத்தான் அது இருந்திருக்கும் என்பதையும் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னும் மேலும், மேலும், வசதிகளை, வாய்ப்புகளை, ஏழை எளிய மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, தொழில் நடத்துபவர்களுக்கு, வணிகர்களுக்கு வசதியாக, வாய்ப்பாக சென்னை மாநகரத்தைத் தயாராக்குகின்ற பணியை நாங்கள் நிறைவேற்றித் தருவோம்.

Comments

Anonymous said…
Good orticle but try to reduce the page.

azifair-sirkali.blogspot.com

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி