Skip to main content

செல்போன் கட்டணத்தை குறைத்து சாதனை படைத்தவர் ராசா: கருணாநிதி பேச்சு


தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக் கூட்டம் சென்னையில் நடந்து. அதில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார். அதன் விவரம்:

தென்சென்னையிலே இவ்வளவு கோலாகலமாக இத்தகைய எழுச்சியோடு இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு என்ன காரணம் என்பதை நான் எண்ணிப்பார்க்கிறேன்.  “அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்” என்று கிராமப்புறங்களிலே ஒரு பழமொழி உண்டு.  அதைப்போலத்தான் தம்பி அன்பழகனை அடிமேல் அடி அடித்து இந்த அம்மியை நகரச்செய்திருக்கிறேன் என்றுதான் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் “அம்மி” நகர்ந்ததுமாத்திரம் அல்ல, நமக்கு முன்னால் அது “கும்மி”யும் அடிப்பதைப்போல் மகத்தான விழாவாக இந்த விழாவை அவரும், நண்பர்களும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.


இந்த மாபெரும் பொதுக்கூட்டம் ஒரு மாவட்ட மாநாட்டினை நினைவுப்படுத்தியதைப்போல அமைந்திருப்பதற்கு காரணம் இது தி.மு.கழகத்தின் பொதுக்குழுவில், இன்று காலையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு விளக்கம் தருகின்ற கூட்டம் என்பதால்தான்.  அந்த விளக்கத்தை நம்முடைய மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய கழகத்தினுடைய பொதுச் செயலாளர், இனமானப் பேராசிரியர் அவர்கள் இங்கே வழங்கி இருக்கிறார்கள்.

அவருக்கு முன்பு பேசிய தம்பி ஸ்டாலின் அவர்களும் மற்றும் உள்ள நம்முடைய கழகத்தினுடைய முன்னணி சொற்பொழிவாளர்களும், செயலாளர்களும் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.  இன்று இந்தக் கூட்டத்தை நாம் நடத்துகின்ற நேரத்தில் தீர்மானங்களை விளக்கிப்பேசிய நம்முடைய பேராசிரியர் அவர்கள், ஒன்றை சுட்டிக்காட்டினார்.  நம்முடைய செய்திகளை, திரித்தும், மறைத்தும், கலகம் மூட்டுகின்ற வகையிலும், வெளியிடுகின்ற நாளேடுகள், ஊடகங்கள் இவைகளைப்பற்றியெல்லாம் இங்கே குறிப்பிட்டார்.  அவர் சொல்லும்போது பின்னால் தம்பி ஜெ.அன்பழகன் என்னிடத்திலே  இந்தக் கூட்டத்திற்கான விளம்பரத்தைக் கூட சில ஏடுகள் வெளியிடுவதற்கு மறுத்துவிட்டன என்று சொன்னார்.

நான் அது அ.தி.மு.க. ஏடா?  அ.தி.மு.க. ஏடாக இருந்தால் தி.மு.க. கூட்ட விளம்பரத்தை எப்படி வெளியிட ஒத்துக்கொள்வார்கள்?  என்று கேட்டேன்.   இல்லை, அ.தி.மு.க. ஏடல்ல;  நடுநிலை ஏடாக இருக்கின்ற ஏடுதான் விளம்பரத்தைப்போட மறுத்துவிட்டார்கள்.  சென்னையில் உள்ள மற்ற எல்லா ஏடுகளிலும் இந்தக்கூட்டத்தினுடைய விளம்பரம் வந்திருக்கும் போது அந்த நடுநிலை ஏடு என்று சொல்லிக் கொள்கின்ற அந்த ஒரு ஏட்டில் மாத்திரம் “மலரின்” வாடை வீசவில்லை, மலரின் வாடைக்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு வாடை வீசிவிட்டது என்று என்னிட‌த்திலே குறிப்பிட்டார்.

ஏன் இதைச்சொல்லுகிறேன் என்றால், பேராசிரியர் அந்த தீர்மானத்தை இங்கே விளக்கிப் பேசியிருக்கின்றார்.  தமிழ்நாட்டில் தி.மு.கழகத்தினுடைய ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், பொறுத்துக் கொள்ள இயலாதவர்கள், எரிச்சல் கணைகளை நம்மீது அன்றாடம் வீசிக்கொண்டிருப்பவர்கள்;  ஏதாவது கிடைக்காதா?  அதை வைத்துக் கொண்டு இந்த ஆட்சியை ஒழித்துவிட முடியாதா? என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்; நம்மை இருட்டடிப்பு செய்தோ, திசை திருப்பியோ மக்களிடத்திலே நம்மைப்பற்றிய பொய்ப்  பிரச்சாரம் செய்தோ, அவதூறு கூறியோ, அக்கிரமச்செய்திகளை வெளியிட்டோ, அழித்துவிட வேண்டும் என்று கருதுகிறார்கள் என்றால் அது இன்று நேற்றல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திராவிட இனத்தை வீழ்த்துவதற்கு இந்த இனத்திற்காக கொடி தூக்கியிருக்கின்ற எந்த இனத்தையும் ஒழிப்பதற்கு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.  புராணக் கதை போலத்தான் தெரியும்.  ஆனால் ஒரு வரலாறு, நம்முடைய பக்கத்து மாநிலம் கேரளத்தில் நடைபெறுகின்ற ஓணம் பண்டிகையைப் பற்றிய ஒரு வரலாறு.  ஓணம் என்றால் நம்முடைய தமிழகத்தில் நடைபெறுகின்ற, ஆயுத பூஜை, தீபாவளி இதைப்போன்ற ஒரு பண்டிகை அங்கே நடைபெறுகிறது என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.  அதற்குப் பிறகு உண்மை தெரிந்தது.  ஓணம் என்பது -  மாவலிச் சக்கரவர்த்தி என்று ஒருவர் கேரளத்தை ஆண்டார் என்றும், அவருடைய ஆட்சி எல்லா மக்களாலும் விரும்பப்பட்ட ஆட்சி என்றும், அந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று அந்த மக்கள் எல்லாம் வாழ்த்துகிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் ஒரு நிலை ஏற்பட்டபோது அங்கிருந்த உயர் ஜாதி மக்கள் இப்படியே இந்த ஆட்சியை விட்டுக் கொண்டு போனால் உயர் ஜாதி மக்களாகிய நாம் என்றைக்கு ஆட்சி பீடத்திலே அமர்வது என்பதற்காக சூழ்ச்சி செய்து மகாவிஷ்ணுவிடத்திலே சென்று கேட்டார்களாம்.  இப்படி ஒரு ஆட்சி நடக்கிறது, அதை ஒழிக்க வேண்டும் என்று.  மகாவிஷ்ணு கேட்டாராம். ஏன்?  “என்ன அநியாயம் செய்கிறார்கள் அந்த ஆட்சியாளர்கள்?” என்று!  சொல்லும்படியாக ஒன்றும் இல்லை, அவர்களே ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.  எங்களுக்கு வாய்ப்பே வழங்கப்பட வில்லை என்று சொன்னார்களாம்.

அவனே ஆண்டால் உங்களுக்கு என்ன ஆகிவிடும் என்று கேட்டார் கடவுள்.  ஒன்றும் இல்லை; பிறகு நாமெல்லாம் ஆட்சிப் பீடத்துக்கு வருவது என்பதை எண்ணிக் கூட பார்க்க முடியாது என்றார்களாம். சரி பரவாயில்லை உங்களுக்கு அந்த ஆட்சியை மாற்றித் தருகிறேன் என்று சொல்லி, மாவலி சக்கரவர்த்தியிடம் சென்று - அவர் பெயரே மாவலி -  மிகப் பிரமாண்டமான பலம் பொருந்திய மன்னன்.  அவனிடத்திலே கேட்டுத்தான் பெற முடியுமே தவிர, போரிட்டு அந்த ஆட்சியைப் பெற முடியாது என்பதால் கேட்டுப் பெறுவதற்காக தந்திரம் செய்து, யாகங்களைச் செய்து, யாசகம் கேட்டு, மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டு, அவன் மூன்றடி மண்ணுக்கு விருப்பம் தெரிவித்து வழங்கியபோது இரண்டடி அளந்து பார்த்துவிட்டு, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று கேட்டு வேறு வழியில்லாமல் மாவலி மன்னனுடைய தலையிலேயே காலை வைத்து -  அப்படி காலை வைத்த நேரத்தில் பலம் கொண்ட வரையில் அழுத்தி அவனை அழித்தார், ஒழித்தார்!

அவன் சாகும்போது கடவுளிடம் கேட்ட வரம் -  ஆண்டவனே,  நான் இந்த மாநிலத்தை ஆண்டவன்,  நீ என்னை ஒழித்து விட்டு வேறொரு ஆட்சிக்கு  இன்றைக்கு விதை துhவிவிட்டாய்,  இருந்தாலும் எனக்கொரு வரம் வேண்டும், அதைக் கொடு, நான் சாகத் தயார் என்றான்.   என்ன வரம் கேள் என்றான் ஆண்டவன்.    பெரிய வரம் ஒன்றுமில்லை,  என்னால் வாழ வைக்கப்பட்ட மக்கள்,  என்னால் முன்னேறிய மக்கள்,  என்னால் வளம் பெற்ற மக்கள்,  என்னால் நலம் பெற்ற குடிபடைகள் -  நான் இப்போது இறந்து போனாலும் -  ஆண்டுக்கு ஒரு முறை நான் இங்கே வந்து அவர்களையெல்லாம் நான் ஆசை தீரப் பார்த்து, அவர்களின் வாழ்த்தைப் பெற வேண்டும், அந்த வரம் மாத்திரம் கொடு என்றானாம்.    பரவாயில்லை, அவன் ஒழிந்தால் சரி என்று அந்த வரத்தைக் கொடுத்து விட்டு ஆண்டவன் மறைந்து விட்டாராம்.   அந்த மக்களைக் காண அவர்களிடத் தில் வாழ்த்து பெற ஆண்டு தோறும் மாவலி வருகின்ற நாள் தான் “ஓணம்” பண்டிகை கொண்டாடப்படுகின்ற நாள் என்று இன்றைக்கும் கேரளத்தில் கதை வழங்குகிறது, புராணமாக அல்ல,  வரலாறாகவே அந்தக் கதை அங்கே வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் - நான் புராணங்களில் கேள்விப் பட்டிருக்கிறோம்.    கொடுமை புரிகின்ற அசுரர்களைத் தான் தேவர்கள் அழிப்பார்கள் என்று.    மக்களை கொலை செய்கின்ற, மக்களிடத்தில் கொள்ளை அடிக்கின்ற, அவர்களை இம்சைப் படுத்துகின்ற மன்னர்களைத் தான் தேவர்கள் அழிப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக் கிறோம்.   ஆனால் நல்லவனாக, மக்களிடத்திலே அன்பைப் பெற்று நீ தான் எங்களுக்குத் தொடர்ந்து மன்னராக இருக்க வேண்டுமென்று வாழ்த்தைப் பெற்ற ஒருவனை அழிக்கிறான் ஒரு ஆண்டவன் என்றால், அந்த ஆண்ட வனுக்காக ஒரு விழா, அது ஓணம் பண்டிகை என்றால், அப்படிக் கொண்டாடப்படுகின்ற அந்த ஓணம் பண்டிகை,  நல்லவனுக்காக அவன் நல்ல ஆட்சி நடத்தியதற்காக பாராட்டி நடத்தப்படுகின்ற விழா என்ற அளவில் அது கொண்டாடப்படுகின்றது.

அதைப் போலத் தான் எங்கே சூத்திரர்கள், திராவிடர்கள் - அவர்கள் தஸ்யூக்கள் என்று அழைக்கப்பட்ட மக்கள் நல்லாட்சி நடத்து கிறார்களோ அவர்களையெல்லாம் வீழ்த்தி விட்டு, அங்கே தாங்கள் வந்து அமர்ந்து கொள்ள ஒரு கதையை ஜோடிப்பார்கள்.  அந்தக் கதையை ஜோடித்து விட்டு அதற்கு ஒரு பண்டிகையின் பெயரை இடுவார்கள்.  அது போலத் தான் தமிழ்நாட்டிலே நடைபெறுகின்ற இந்த ஆட்சி நான் மாவலி அல்ல - அவ்வளவு வலிமை பொருந்தியவன் அல்ல -  மாவலி மரபின் ஆட்சி அவ்வளவு தான் - மாவலி மன்னனுடைய மரபு ஆட்சி.  அந்த ஆட்சியில் ஒருவனாக நான் இருக்கிறேன் என்றால் என் தலைமை யிலே இருக்கின்ற இந்த ஆட்சியை வீழ்த்த ஒழிக்க அகற்ற புறம் கூறி இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட என்னென்ன தில்லுமுல்லுகள் உண்டோ, திருகு தாளங்கள் உண்டோ அவ்வளவையும் செய்து பார்க்க ஒரு கூட்டம் தயாராகியிருக்கின்றது.  ஏனென்றால் அவர்கள் கையை விட்டு அதிகாரம் போய்,  ஆட்சி போய்;  “ஏ சூத்திரா, எட்டி நில்!  ஏ பஞ்சமா! பக்கத்திலே வராதே என்றெல்லாம் ஆணையிட்ட அந்தக் காலம் போய் பல ஆண்டுகள் ஆகிறது.   அதை மீண்டும் பெறுவதற்காக ஒரு கூட்டம் இன்றைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.  

அந்த முயற்சிக்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள சாதனமாக இருப்பது செய்திப் பத்திரிகைகள் - தொலைக்காட்சிகள் -  இவைகள்தான் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன.  பொய்ப் பிரச்சாரத்தைச் செய்தே, இந்த ஆட்சியை வீழ்த்தி விட்டு, நாம் வந்து அமர்ந்து விடலாம் என்று கருதுகிறார்கள் என்றால், அது முடியுமா, நடக்குமா என்பதுதான் கேள்வி.  ஆனால், அந்த முயற்சி இப்போது நடக்கிறதே - அதை நாம் இப்போது அனுமதித்துக் கொண்டிருக்கிறோமே - இதனுடைய விளைவுகளையும் நாம் அனுபவித்துத்தானே ஆக வேண்டும் என்ற அந்த நிலையை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.  அப்படி எண்ணிப் பார்ப்பதன் அடையாளமாகத்தான் அந்தக் கருத்துக்களை உள்ளடக்கித்தான் காலையிலே நடைபெற்ற பொதுக் குழுவிலே - 21 தீர்மானங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம்.

மாவலி மன்னன் எப்படியெல்லாம் மக்களை வாழ வைத்தான், எப்படியெல்லாம் சாதனை புரிந்து, அவர்களை சந்தோஷப்படுத்தினான் - அவர்களுடைய வாழ்விலே ஒளி பெறச் செய்தான் என்பதைப்போல, இந்த ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் எத்தகைய நலன்களையெல்லாம் பெற்றார்கள் என்பதை அடுக்கடுக்காக - வரிசை வரிசையாக எடுத்துச் சொல்ல நிலை இருந்த போதிலும், வாய்ப்பிருந்த போதிலும், நேரமில்லாத காரணத்தால், நான் அவைகளையெல்லாம் சுருக்கமாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

தம்பி பரிதி இளம்வழுதி பேசியதைப்போல, மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கைரிக்ஷாக்களை ஒழித்து - அவற்றிற்கு மாற்றாக இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.    நான் கேட்கிறேன் -  மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்ற இந்தக் குரல் நமக்கு மாத்திரமே சொந்தமான குரல் அல்ல.  எனது அருமை நண்பர்கள் - முன்னாள் தோழர்கள், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் சொந்தமான குரல்தான்.  மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாக்களை ஒழித்தது நாம் - இன்னமும் ஒழிக்காமல், மேற்கு வங்கத்து சாலைகளிலே அவைகளை ஓட விட்டுக் கொண்டிருப்பவர்கள் - அங்கே ஆட்சி நடத்துகின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

நாம் கைரிக்ஷாக்களை ஒழித்து - 1971 ஆம் ஆண்டு அதற்காக விழா நடத்தி, கைரிக்ஷாக்களுக்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா வழங்கிய ஆண்டு அந்த ஆண்டு.  ஆனால், இன்னமும் மேற்கு வங்கத்தில், கல்கத்தாவில் சாலைகளில் மனிதனை வைத்து மனிதன் இழுக்கின்ற அந்த மாபெரும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

பார்வை இழந்தோருக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டத்தை நாம் வழங்கினோம். விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி, தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றோம்.  விவசாயிகளின் நலன் கருதி உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைத்திட, தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளை அமைத்திருக்கிறோம்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆகும் சட்டத்தை இயற்றியிருக்கிறோம்.  மனிதக் கழிவை மனிதன் சுமக்கும் கொடுமையை ஒழிக்க - துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கான திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.  அரசுப் பணிகளில் மகளிருக்கு 30 சதவிகித வேலைவாய்ப்பு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.

இப்படிச் சமுதாய நலத் திட்டங்களை நிறைவேற்றி - அதன் காரணமாக ஏழையெளிய மக்கள், சமுதாயத்தின் அடித்தளத்திலே கிடக்கின்ற மக்கள், பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் வாழ்ந்த மக்கள் புளகாங்கிதத்தோடு, புன்னகையோடு, பூரிப்போடு வாழ்வதற்கு வழிவகுத்த இயக்கம் திராவிட இயக்கம்.  அந்த இயக்கத்தின் சார்பாக நடைபெறுகின்ற ஆட்சி இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை நான் பெருமையோடு உங்களுக்குச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

இப்படி பல சாதனைகளை, எண்ணிலடங்கா சாதனைகளை - குறிப்பாக இந்த 4, 5 ஆண்டுகளில் நாம் நடத்திக் காண்பித்திருக்கிறோம்.   அதிலே உச்சக்கட்ட சாதனைதான்,  தமிழ்நாட்டில் இனிமேல் குடிசைகளே இருக்கக்கூடாது - கிராமங்களில் குடிசைகளே இருக்கக் கூடாது என்ற ஒரு திட்டம்.  கிராமங்களில் குடிசைகள் இருக்கக் கூடாது - நகரங்களில் குடிசைப் பகுதிகளே இருக்கக்கூடாது என்பதற்காக இந்தத் திட்டத்தை அறிவித்து, அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிப்பதற்காக - அதற்கான பணத்தையும் ஒதுக்கி, வேலை வேக வேமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள்.

சில பேர் கேட்டார்கள்.  கருணாநிதி சொல்கிறார் - அன்பழகன் சொல்கிறார் - ஸ்டாலின் சொல்கிறார் - இவர்கள் எல்லாம் சொல்கிறார்கள் - “நாங்கள் உங்களுக்கு வீடு கட்டித் தருவோம்” என்று சொல்கிறார்கள்.  இந்தத் தேர்தலுக்குப் பிறகு இவர்கள் வருவார்களா - என்ன ஆகும் இந்தத் திட்டம்  என்றெல்லாம்கூடக் கேட்கிறார்கள்.  நான் அவர்களுக்குச் சொல்கிற பதில் -  இந்தத் திட்டம் தொடரும்.  ஏனென்றால், திட்டத்தைக் கொண்டு வந்த நாங்கள் ஆட்சிக்கு மீண்டும் வருவோம்.   நாங்கள் ஆட்சியில் தொடருகிற காரணத்தால், இந்தத் திட்டமும் தொடரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மிக முக்கியமாக - இன்றைக்கு நம்முடைய உள்ளங்களில் எல்லாம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி - அது குறித்த தீர்மானம் - இன்று பொதுக் குழுவிலே இடம்பெற்று, அதனையும் - அதுபற்றியும் இங்கே பேசிய நண்பர்கள் - பேராசிரியர் உள்ளிட்டோர்கள் ஒன்றிரண்டு குறிப்புகளை இங்கே தந்திருக்கிறார்கள்.  பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அது தீர்மானம் 14-ஆக இடம் பெற்றிருக்கிறது.

“2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்காட்டும் ஒரே சான்று இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஆகும்.  இதே தணிக்கை அறிக்கை பா.ஜ.க. ஆட்சி நடைபெற்ற போதும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்குப் பெரு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக்காட்டியிருக்கின்றது.  தற்போது எழுந்துள்ள எதிர்ப்போ, குற்றச்சாற்றோ அப்போது கூறப்படவில்லை.  மாறாக, ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும், கைது செய்ய வேண்டுமென்றும், இல்லாவிட்டால் பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்றும் தங்களின் ஜனநாயகக் கடமையைக் கூட நிறைவேற்ற மறுத்து,  தொடர்ந்து வலியுறுத்தி - அதனைச் செயல்படுத்திக் காட்டி, அதிலே வெற்றி பெற்ற பிறகும்,  இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவின் விசாரணையே வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர்.   தணிக்கை அறிக்கை குறித்து முறைப்படி நடத்தப்பட வேண்டிய விசாரணை - பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவினால், அதன் தலைவரான பா.ஜ.க.-வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றது.  ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற பெருந்தன்மையோடு, மேலும், இந்தப் பிரச்சினையில் 2001 ஆம் ஆண்டிலிருந்து 2009 முடிய அரசுகள் பின்பற்றிய ஒதுக்கீட்டு கொள்கை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சிவராஜ் பாட்டீல் அவர்கள் நியமிக்கப்பட்டு, அவரும் 31-1-2011 அன்று தமது அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை அடிப்படையாக வைத்து இந்தியப் புலனாய்வுத் துறை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் காலக்கெடு நிர்ணயித்து, இந்தப் பிரச்சினையில் புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டு புலனாய்வு தீவிரமாக நடந்து வருவதோடு, இந்த வழக்கில் புலனாய்வுத் துறையினால் ராஜா அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு மட்டும்தான் விசாரிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துவதும், மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி  தீர்வு காணும் வாய்ப்பை விட்டு விட்டு, நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே 22 நாட்கள் முடக்கியதும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளாகவே இப்பொதுக் குழு கருதுகிறது.

தொடக்கத்தில் இந்தப் பிரச்சினை எழுந்த போதே 8-12-2010 அன்று செய்தியாளர்கள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களிடம் கேட்ட போது, ராஜா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறார்.    ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்டு விட்ட காரணத்தாலேயே அவர் குற்றவாளியாக ஆகி விட மாட்டார் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.   எனவே இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு திறந்த புத்தகமாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு,  இதனைப் பெரிதுபடுத்தி எப்படியாவது கழகத்தின் மீது களங்கம் சுமத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது”
என்ற இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்றியிருப்பது - தெளிவான, நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான்.

தம்பி ராஜா இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்று செய்திருக்கிற குற்றம் என்னவென்று பார்த்தால் - ஏழையெளிய மக்களுக்கு இந்தத் தொலைபேசியை - இதுவரையில் பணக்காரர்கள் மாத்திரம், சீமான் வீட்டுப் பிள்ளைகள் - சீமாட்டிகள் மாத்திரம் பயன்படுத்திய இந்தத் தொலைபேசியை - நடவு நட்டுக் கொண்டிருக்கின்ற நாகம்மாளும், தயிர் விற்றுக் கொண்டிருக்கின்ற தையல் நாயகியும் - போகும்போதே ஒரு கையிலே கலயம், தலையிலே சும்மாடு - அந்தச் சும்மாட்டின் மேலே தயிர் பானை, பால் பானை -  காதிலே இந்தத் தொலைபேசி - அதிலே “மோர் வாங்கலியோ, மோர்” என்ற கூச்சலுக்குப் பதிலாக, “ஹலோ, ஹலோ” என்று இங்கிருந்து தொலைபேசி வழியாக இன்னொரு பகுதியிலே உள்ள அம்மையாரையோ, சொந்தக்காரர்களையோ, நண்பர்களையோ அழைத்துப் பேசுகிற அளவிற்கு - மிக மிகக் குறைந்த விலையில், குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கான ஒரு நிலையை - கோடானு கோடி மக்கள் அந்த வாய்ப்பைப் பெறுகின்ற அளவிற்கு ஒரு நிலைமையை ஏற்படுத்திய பெருமை -  டில்லியிலே கைதாகியிருக்கின்ற  நம்முடைய தம்பி ராஜாவுக்கு உண்டு.  நான் இங்கிருந்தவாறே, இந்த மக்களின் சார்பாக டில்லிச் சிறைச்சாலையிலே இருக்கின்ற தம்பி ராஜாவைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் - வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.   அந்த ஏழை மக்கள், எளிய மக்கள் - அவரவர்கள் பயன்படுத்துகின்ற இந்தத் தொலைபேசி இவ்வளவு அதிகமாக இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அவர்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது என்றால், இந்தச் சாதனை புரிந்தவர் தம்பி ராஜா.  அவருக்கு இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றால், வேறு ஒன்றுமில்லை.  கேரளத்து மாவலி சக்கரவர்த்தியினுடைய கதை போன்றதுதான் இதுவும்.  அப்படித்தான் நடைபெற்றிருக்கிறது இந்தக் கதை.

எனவே, நம்மவர்கள் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துத்தான் தீரவேண்டும். இந்தக் கொடுமைகளை அனுபவித்தால்தான், நாம் இந்த இனத்திற்காக - சமுதாயத்திற்காக நம்மை அர்ப்பணித்துக் கொண்டோம் என்ற அந்தப் பெருமையை நாம் பெற முடியும்.  நமக்காக இங்கே இருக்கின்ற ஏடுகளோ அல்லது உயர்ச் சாதிக்காரர்களோ பரிந்து பேச மாட்டர்கள்.   நம்மைப் பாராட்ட மாட்டார்கள்.  நான் கேட்கிறேன், சென்னையிலே உலகத் தரம் வாய்ந்த, ஆசிய கண்டத்திலேயே இல்லாத அளவிற்கு அண்ணா அவர்களுடைய பெயரால் இலட்சக்கணக்கான புத்தகங்கள் அடங்கிய ஒரு நூலகத்தை அமைத்திருக்கிறோமே - எந்தவொரு பத்திரிகைகாரர்களாவது இதுவரையிலே பாராட்டி எழுதியிருக்கிறார்களா?
 
கர்நாடகத்திலே கட்டப்பட்ட “விதான் சவுதா”விற்கு ஈடாக, இன்னும் டெல்லிப் பட்டணத்திலே இருக்கின்ற கட்டடங்களுக்கு ஈடாக அமைத்திருக்கிறோமே - ஜெர்மனிய நாட்டினுடைய நிபுணர்களைக் கொண்டு, ஒரு அருமையான மாளிகை - அந்த மாளிகைக்கு - அது இருக்கின்ற இடத்திற்கு, எல்லோராலும் மறந்து விடப்பட்ட பழைய முதலமைச்சர் ஓமந்தூரார் - “ஓ.பி. ராமசாமி ரெட்டியார்” அவர்களுடைய பெயரை வைத்து, அந்த வளாகத்திலே அவ்வளவு பெரிய மாளிகையை எழுப்பியிருக்கிறோமே - அந்த மாளிகையைத் திறந்து வைக்க அம்மையார் சோனியா காந்தி அவர்களுடைய முன்னிலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை அழைத்து அவ்வளவு பிரமாதமாக விழாவை நடத்தினோமே, எந்தப் பத்திரிக்கைக்காரர் அதைப் பாராட்டி எழுதினார்?    ஒன்றிரண்டுப் பத்திரிகைகளைத் தவிர.  இன உணர்வு இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கின்ற பத்திரிகைகாரர்களைத் தவிர - தமிழகத்திலே வேறு எந்தத் தமிழனுக்கு அந்த உணர்வு வந்தது?

நான் சொன்னால் நீங்கள் வருத்தப்படக் கூடாது.  தமிழ் சாதியை நண்டுகளுக்கு ஒப்பிடுவார்கள் சில பேர்.  எப்படியென்றால், ஒரு நண்டு மேலே ஏறும்போது, கீழே இருக்கின்ற நண்டுகள் எல்லாம், அதை இழுத்து இழுத்துக் கீழே விட்டுவிடுமாம் - அது ஏற முடியாமல் தடுத்துக் கொண்டிருக்குமாம் -  அதைப்போலத்தான் தமிழ் ஜாதி என்று யாரோ ஒருவர் எழுதினார்.  அது உண்மைதான் என்பதை இன்றைக்கு நாம் நேரடியாகக் காண்கிறோம்.  அதற்காக நான் வருத்தப்படவில்லை.  நம்மைப் பாராட்டவில்லையே - நம்முடைய இந்த அருஞ்செயலை யாரும் குறிப்பிடவில்லையே?  நாம் கட்டியதுதானே இந்த மண்டபம் - நாம் எழுப்பியதுதானே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை - நாம் உருவாக்கியதுதானே இந்த உப்பரிகை -  நாம் நடத்தியதுதானே கோவை செம்மொழித் தமிழ் மாநாடு - நாம் உருவாக்கியதுதானே இந்தப் புத்தக ஆலயம் - நாம் உருவாக்கியதுதானே சட்டமன்றத்திற்கான உயர்ந்த கட்டடம்?  இவைகளைப் பற்றி இவர்கள் எழுதாமல் இருக்கலாம்.  

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன்.  நான் இல்லாத காலத்திலேகூட, இன்னும் ஒரு நூறாண்டுக் காலத்திற்குப் பிறகு - “கருணாநிதி என்று ஒருவன் இருந்தான்” என்று வரலாறு சொன்னாலும், சொல்லாவிட்டாலும் - “அவன் எழுப்பிய மாளிகைகள் - அவன் உருவாக்கிய கோபுரங்கள் - அவன் சித்தரித்த சின்னங்கள்” - இவைகள் எல்லாம் இருந்து என் பெயரைச் சொல்லும். ஆனால், என் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இவைகள் அல்ல. என் பெயர் பரவ வேண்டும் என்பதற்காக அல்ல. என் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக அல்ல.   நான் ஆற்றிய காரியங்கள் தமிழனுக்காக,  தமிழ் மக்களுக்காக,  தமிழ்ச் சாதி மக்களுக்காக, தமிழ்ச் சமுதாயத்திற்காக,  நான் ஆற்றிய பணிகள் இவைகள் வரலாற்றில் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நிலைக்கத்தான் போகிறது.

அதை யாரும் மறுத்து விட முடியாது.  யாரும் அழித்து விட முடியாது.   அப்படிப்பட்ட ஒரு வரலாற்றை உருவாக்குகிற தனி மனிதனாக அல்ல,  இங்கே இருக்கின்ற நம்முடைய கழகத்தினுடைய காவலர்கள், பொதுச் செயலாளரிலிருந்து, துணைப் பொதுச் செயலாளர்களிலிருந்து மற்றும் கழக முன்னோடிகள் எங்களை யெல்லாம் இன்றைக்கு வாழ்த்திப் பாராட்டி எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கின்ற எங்களுடைய ரத்தங்களாக, எங்களுடைய உதிரங்களாக எங்களுடைய உயிர் மூச்சுக்களாக என் எதிரே அமர்ந்திருக்கின்ற தமிழ் பெருமக்களாகிய நீங்கள் - நீங்கள் நினைத்தால் போதும். யாரோ, பெரியார் சொன்னதைப்போல, ஒரு மேல்சாதிக்காரன் -  ஒரு பத்திரிக்கைக்காரன் எங்களைப் பாராட்டி எழுதி விட்டால், அது தான் எங்களுக்கு வைத்த மகுடம் என்று நாங்கள் கருத மாட்டோம்.  எங்களை ஒரு சாதாரண தாய், தமிழ்க் கிழவி, “அப்பா, எங்களுக்கு வயிராறச் சோறு கொடுத்தாயே, வாழ்க” என்று சொன்னால் தமிழ்த் தாயே உருவெடுத்து வந்து வாழ்த்தியதாக நாங்கள் கருதிக் கொள்வோம்.

எனவே, யாருடைய பாராட்டையும் அல்ல - யாருடைய மதிப்பு மரியாதையையும் அல்ல.   நான் வேண்டி விரும்புவது நான் என் காலத்தில்   ஆற்றிய இந்தப் பணிகளையெல்லாம் பாராட்டுவதற்கு கடல் போல் திரண்டிருக்கின்ற நீங்கள் இருக்கிறீர்கள்.  உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.   உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள்.  உங்களை நான் என்றைக்கும் மறக்காமல் இருப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் தமிழகத்திலே செய்து முடித்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். செய்யத் தொடங்கியிருக்கிறேன்.   இந்தத் தொடக்கத்தைத் தொட்ர்ந்து முற்றாக முடிக்க வேண்டிய கடமை, கண்ணின் மணிகளே,  தமிழ்த் தாய் பெற்றெடுத்த  தங்கங்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்த ஓட்டமே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடி நரம்புகளே, ஒரு முடிவு எனக்கேற்படுமானால், அப்பொழுது கூட, இந்தப் பொறுப்புகளை எல்லாம் அண்ணா எப்படி என்னிடத்திலே ஒப்படைத்து விட்டுப் போனாரோ அதைப் போல இந்தப் பொறுப்பையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளே,  உங்களிடத்திலே ஒப்படைத்திருப்பதாகக் கருதிக் கொண்டு இந்தக் கழகத்தைக் காப்பாற்றுங்கள், திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுங்கள்,  திராவிட இனத்தைக் காப்பாற்றுங்கள்.

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி