Skip to main content

தி.மு.க.வின் சாதனைகளை காங்கிரசும் சொல்லும்: கருணாநிதி பேச்சு

இலவச சர்க்கரைப் பொங்கல் பொருள்கள், இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்தைத் முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 1) சென்னை பல்லாவரத்தில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரை:

இன்றையதினம் இனிய நாள்; இனிப்பான நாள். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கான பொருள்களை இலவசமாக வழங்கும் விழா. தமிழர்கள் தங்களுடைய மொழியை, கலையை, நாகரிகத்தை, இனச் செழுமையை எண்ணிப் பார்த்து பூரிப்படைகிற நாள்; பொங்கல் திருநாள்.  இந்தப் பொங்கல் திருநாளை “தமிழர் திருநாள்” என்று நாம் கொண்டாடுகின்றோம். நாம் என்றால்  இன்றைக்குக் கொண்டாடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நாம் அல்ல.  நமக்கு முன்பே, நம்முடைய இன உணர்வுக்கு மெருகேற்றிய, இன உணர்வு தீப்பந்தத்தை ஓங்கிப் பிடித்த மறைமலையடிகளார் போன்றவர்கள், திரு.வி.க. போன்றவர்கள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள், நமச்சிவாயனார்  போன்றவர்கள் இத்தகைய   தமிழ்ப் பெரியோர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள்  எல்லாம் ஒன்று கூடி, எல்லா மொழிக்காரர்களுக்கும் ஒரு ஆண்டுக் கணக்கு இருக்கின்றது. 
ஆனால் தமிழர்களாகிய நமக்கு  அந்த ஆண்டுக் கணக்கில்லையே என்று  வருந்தி, அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ள உண்மையை  அறிய  இதுதான் தமிழ் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு என்பதைக் கண்டுபிடிக்க  500 புலவர்கள் ஆய்வு நடத்தி  அந்த  500 பேரும் எடுத்த முடிவு தான் தமிழனுக்கு ஒரு ஆண்டுப் பிறப்பு நாள் என்று உண்டு, அதுதான்  தைத் திங்கள் முதல் நாள் அந்த தைத் திங்கள் முதல் நாளில் அவனுடைய ஆண்டு தொடங்குகிறது என்று நாம் முடிவு செய்வோமென்று அறிவித்தார்கள்.

அனைத்துலகத்திலும் ஆங்கில மொழி ஆதிக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கத்திற்கு வந்துவிட்ட ஆங்கில மொழிக் கணக்கு ஆண்டு முதல் நாள் என்று  ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலுங்கூட,  இன்றளவும்  தெலுங்கு வருடப் பிறப்பு, மலையாள வருடப் பிறப்பு, இந்திக்காரர்களுக்கான வருடப் பிறப்பு, கன்னடியர்களுக்கான வருடப் பிறப்பு என்றிருப்பதைப் போல, தமிழர்களுக்கான வருடப் பிறப்பு என்பது சித்திரை, வைகாசி என்று தொடங்கினாலும்  அந்த  வருடங்கள், எந்த வருடங்கள் என்று  கணக்கிட முடியாமல் ஒரு குழப்பத்தில் வந்து முடிகின்ற கணக்காகத்தான்  தமிழர்களின்  கணக்கு இருந்து வருகிறது.

“நீ எந்த வருடம் பிறந்தாய்?” என்று கேட்டால், அவன் தமிழ் வருடப் பிறப்பை எண்ணி, ஒரு வருடத்தின் பெயரைச் சொன்னால், அந்த வருடத்திலிருந்து இதுவரை எண்ணிப் பார்த்தால்  60 வயதான ஒரு கிழவனுக்கு  17 வயதுதான் ஆகியிருக்கும் - நம்முடைய தமிழ் வருடக் கணக்கின்படி!  உதாரணமாக நான் ரக்தாச்சி வருடத்தில் பிறந்ததாக எனக்குச் சொல்வார்கள் - பஞ்சாக்கத்தில் அப்படித்தான் எழுதியிருக்கிறார்கள். எனக்கு பிறந்த நாள் எழுதியவர்கள், அப்படித்தான் எழுதினார்கள். ரக்தாச்சி, குரோதன, அட்சய  என்ற  இந்த மூன்று ஆண்டுகளைக் கடந்தால்,  பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதுத, பிரஜோபத்தி, ஆங்கிரச,  ஸ்ரீமுக,  பவ, யுவ, தாது,  ஈஸ்வர, வெகுதான்ய என்று  நீளும். அப்படி எண்ணிப் பார்த்தால் 38 வருடம் வரும். ஆக என்னுடைய வயது  முப்பத்தி எட்டா? காரணம், நம்முடைய  வருடக் கணக்கு  வடமொழி கணக்கு. பிரபவ என்று ஆரம்பித்து அட்சய என்று முடிகின்ற அறுபது வருடங்களைத்தான் நாம் கணக்கிலே வைத்துக் கொள்கிறோம்.
  
இதைச் சொல்கின்ற காரணத்தால் ஆஸ்தீகவாதிகள், ஆண்டவன் பக்தர்கள், சமஸ்கிருத மொழியிலே பாண்டித்யம் பெற்றோர், அந்த மொழியின் ஆர்வலர்கள் யாரும் என்னைத் தவறாகக் கருதக் கூடாது.  நான் சொல்வது அவர்கள் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளக் கூடிய உண்மை. நமக்கு அறுபது வருடங்கள்தான் கணக்கு. ஒரு அறுபது  வருடம்  முடிந்ததும், மறுபடியும்  சுழன்று சுழன்று வரும்,  அடுத்தடுத்த வருடங்களாக!  அக்சய  முடிந்ததும், பிரபவ தொடங்கும். பிரபவ வருடத்தில் தொடங்கி அக்சய வருடத்தில்  முடியும். மீண்டும் பிரபவ  தொடங்கும். இப்படிப் பார்த்தால்  அக்சய வருடத்தில் ஒருவன் பிறந்திருந்தால் அவனுக்கு   50 வயதானாலும் கூட அவனுடைய வயதை அடுத்த  பிரபவ வருடத்திலே பார்த்தால், ஒரு வயது  என்றுதான் கணக்கிட முடியும். அப்படி சுழலுவதால் அந்தக் கணக்கு  தமிழர்களுடைய ஆண்டுக் கணக்கை ஒழுங்கு படுத்தக்கூடிய  திட்டவட்டமாகச் சொல்லக் கூடிய கணக்காக அல்ல  என்ற காரணத்தினாலேதான்  500  பெரும்  புலவர்கள் ஆய்ந்தறிந்து, மாநாடு கூட்டி, இன்றைக்கு நாம் பல்லவபுரத்திலே கூடியிருக்கிறோம் என்றால்  அன்றைக்கு அதே பல்லவபுரத்தில் வாழ்ந்த  பெரும் புலவர்  மறைமலையடிகள் தலைமையில்  எடுத்த முடிவுதான் தமிழர்களுக்கு தை மாதம் முதல் நாள்தான் புத்தாண்டு பிறந்த நாள் என்று உறுதி செய்தார்கள்.   அதனால்தான் போலும் இந்த விழா கூட இன்றையதினம் அதே பல்லவபுரத்தில் நடக்கிறது நான் கலந்து கொள்கிறேன்.
 
அப்படிப்பட்ட பெரிய  ஆய்வு நடத்தி  அறிவித்து  அதனை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் பின்பற்றி, இன்றைக்கு  தமிழர் திருநாளை நாம் கொண்டாடுகிறோம். இந்தப் பொங்கல் திருநாளை  நீங்கள் பஞ்சாங்கத்தில் எடுத்துப் பார்த்தால் என்ன குறிப்பிடப்பட்டிருக்கும் தெரியுமா? “மகர சங்கராந்தி” என்று குறிப்பிட்டிருப்பார்கள். நம்முடைய ஜெகத்ரட்சகனைக் கேட்டால் தெரியும்.  பஞ்சாங்கத்தைப் பார்க்கக் கூடியவர் அவர். ஒரு மஞ்சள் தாள் அட்டையுடன் பஞ்சாங்கம் இருக்கும். அதில்  ஒரு பாம்பு படம் இருக்கும். அந்தப் பக்கத்தில் “மகர சங்கராந்தி”  என்றிருக்கும்.    அதைப் படித்துப் பார்த்தால்  “மகர சங்கராந்தி -  ஸ்ரீ புருட உருவத்தோடு  கைகளிலே வேல் ஏந்தி,  சூலம் ஏந்தி - எருமை வாகனத்தில் ஏறிக் கொண்டு இந்த ஆண்டு வருகிறாள்” என்று போட்டிருக்கும். 

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வாகனத்திலே வருவாள். ஒரு வருடம் எருமையில் வருவாள், ஒரு வருடம் சிங்கத்திலே வருவாள், ஒரு வருடம் புலி மேலே ஏறி வருவாள், மகர சங்கராந்தி இஷ்டப்பட்ட வாகனத்திலே ஏறி வருவாள். எப்படி நாம் “பியட்” கார், “மோட்டார் சைக்கிள்”, “சைக்கிள்”  என்றெல்லாம் வாகனங்களை மாற்றுகிறோமோ, அதைப் போல அவர்கள் வாகனத்தை மாற்றிக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும்  வருவார்கள். அப்படி வருகின்ற அந்த மகர சங்கராந்தியின் பலன்களை  அந்தப் பஞ்சாங்கத்திலேயே  போட்டிருப்பார்கள். நமக்கு இந்த வம்பு எல்லாம் வேண்டாம் என்பதற்காகத்தான் எப்படி  தை மாதம் முதல் நாள் ஆண்டுக் கணக்கு தொடங்குகிறதோ, அப்படி தொடங்குவதை நம்பி, அப்படியே ஏற்றுக் கொண்டு  தமிழர்களுடைய  ஆண்டுக் கணக்கு வரிசைப்படி இருக்க வேண்டுமே தவிர, இடையிடையே  மாறி மாறி  தொல்லை கொடுக்கக் கூடாது, குழப்பத்தை விளைவிக்கக் கூடாது என்ற அளவில் அதையேற்றுக் கொண்டிருக்கின்றோம்.  

அப்படி ஏற்றுக் கொண்ட நாள்தான் இந்த நாள். அதனால்தான் இதை “தமிழர் திருநாள்” என்று  நாம் ஏற்கனவே  அழைத்து ஏறத்தாழ பகுத்தறிவாளர்கள் அனைவராலும் இது ஒத்துக் கொள்ளப்பட்டு  பகுத்தறிவு பற்றிக் கவலைப்படாதவர்கள் சில பேரால்  இன்றைக்கும் அது மறுக்கப்படலாம்  தமிழ்மொழியின் ஆர்வலர்கள், தமிழ்மொழி வித்தகர்கள், தமிழ்ப் பெரும் புலவர்கள் அத்தனை பேராலும் ஏற்றுக் கொண்ட ஒன்றைத்தான்  நாமாக அல்ல நம்முடைய மூதாதையர், முன்னோர்கள், படித்த புலவர்கள், நம்மை ஆளாக்கியவர்கள், நம்மை தமிழர்கள் என்று அடையாளம் காட்டியவர்கள்  - அவர்கள்  அடையாளம் காட்டியதுதான்  இந்த ஆண்டுக் கணக்கு. அந்த ஆண்டின் கணக்குப்படி  தமிழர் திருநாள் தைத் திங்கள் முதல் நாள்.
   
ஆண்டுக் கணக்கிலே ஆங்கிலேயர்களுடைய முதல் நாளை அவர்கள் கொண்டாடுவது போல,  ஆங்காங்கு விளக்குகளைத் தொங்க விட்டு  மின்மினி  மின்னுவதைப் போல எல்லா மரங்களிலும் விளக்குகளைத் தொடங்க விட்டு  கடைகளின் முகப்புகளில் எல்லாம்  அலங்காரம் செய்து, ஒவ்வொரு வீட்டிலும் எழில் குலுங்கச் சிங்காரித்து  இப்படி அவர்கள் செய்வதைப் போல  நாமும் செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். ஏழையாக இருந்தால் செய்ய முடியாது. ஏழையாக இருந்தால் கூட இரண்டு அகல் விளக்கையேற்றி வைக்க இயலாதவர்களாக இருக்க முடியாது. எனவே அனைவரும்  வரும் பொங்கல் திருநாளில் அவர்கள் வீட்டு முகப்புகளில் விளக்குகளையேற்றி வைக்க வேண்டும்.    அவர்களுக்கு வணிகத் தலங்கள்  இருந்தால் அத்தனையிலும் சர விளக்குகளால் ஒளி உமிழச் செய்ய வேண்டும். அதைச் செய்தால்தான் நாம் தமிழர்கள். தமிழ் நிலத்தை மதிப்பவர்கள். தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றுபவர்கள் என்ற  அடையாளச் சின்னத்திற்கு உரியவர்களாவோம்.

பொங்கலைக் கொண்டாடுகின்ற நாளில் ஒரு ஏழையினால் நாம் கொண்டாடுகின்ற அளவிற்கு  பொங்கல் விழாவையோ, தீபாவளி விழாவையோ, ஆயுத பூஜையையோ  கொண்டாட  முடியவில்லை என்பதை உணர்ந்த காரணத்தால்தான்  ஏழைகளின்  திருநாளாக இருக்கின்ற நடுத்தர மக்களின் திருநாளாக இருக்கின்ற  இந்த விழாவை அனைவரும் கொண்டாடுவோம் என்று  பொங்கல் நாளில்  நம்மால் இயன்ற அளவிற்கு அனைவருக்கும் பொங்கலை வழங்குவோம்  என்று உறுதியெடுத்துக் கொண்டு இந்த அரசு  இரண்டு  மூன்று ஆண்டுகளாக  இந்தக் காரியத்தைச் செய்து வருகின்றது. அப்படிச் செய்கின்ற இந்தக் காரியத்திற்கு பச்சரிசி  500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசிப் பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்  20  கிராம்  ஆகிய பொருள்களை இலவசமாக வழங்குகிறோம்.

இலவசம் என்பது  ஒரு கேலிக்குரிய, இழிவான சொல்லாக  இன்றைக்குச் சொல்லப்பட்டாலுங்கூட   இதைச் சில பத்திரிகைக்காரர்கள்  கருணாநிதி ஆட்சியில் எல்லாம் இலவசம், இலவசம், இலவசம் என்றெல்லாம்  இது என்ன பொருளாதாரம்  என்று கேலி செய்தாலுங்கூட அவர்கள் பத்திரிகைகளை எடுத்துப்பார்த்தால்  சில பத்திரிகைகள்  சிறப்பு மலர் வெளியிடும்போது ஒரு “இலவச இணைப்பு”  என்று வைக்கிறார்கள். அந்த இலவச  இணைப்பினால் கெடாத பொருளாதாரமா  நாங்கள்  இன உணர்வுக்காக வழங்குகின்ற  இலவசத்தின் காரணமாக கெட்டு விடும் என்பதை தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

இலவச இணைப்பை அவர்கள் வெளியிடுவார்களாம், நாம் இலவசமாக எதையும் தரக் கூடாதாம்.    இதிலே அவர்கள் இலவசத்தைக் கேலி செய்யவில்லை. இந்த இயக்கத்தைக் கேலி செய்கிறார்கள்.   கிண்டல் செய்கிறார்கள். ஆனால் இந்த இயக்கம் ஏழைகள் உள்ள வரை  தமிழகத்திலே ஏழைகள் நடமாடுகின்றவரை அந்த ஏழைகளுக்காக  இலவசமாக எதையும் வழங்கும் என்பதை மாத்திரம் நான் சொல்லிக் கொள்கிறேன்.
 
அதைத்தான் நம்முடைய சகோதரி யசோதா அம்மையார் பேசும்போது குறிப்பிட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் என்னுடைய தலைமையில் நடைபெறுகின்ற இந்த ஆட்சியில் ஒரு நாளைக்கு எத்தகைய நன்மைகளை ஏழையெளிய மக்கள், சாதாரண சாமான்ய மக்கள், பாட்டாளி மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை வரிசையாகச் சொன்னார்கள். பெண்களுக்குக் கர்ப்பமுற்றாலே 6 ஆயிரம் ரூபாய். அவர்கள் குழந்தைகளை வளர்க்க, அதற்கு ஆகும் செலவு இவைகளையெல்லாம் இந்த அரசு தாயாக இருந்து கொடுத்து, அவர்களைப் பாதுகாக்கிறது என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.
 
அவர் அப்படிப் பேசும்போது நான் தம்பி துரைமுருகனைத்தான் எண்ணிக் கொண்டேன். தம்பி துரைமுருகன் பல கூட்டங்களில் கழக ஆட்சியில் ஏழையெளிய மக்களுடைய வீடுகளில் காலையிலிருந்து, மாலை வரையில் அவர்களுடைய வீட்டிற்குத் தேவையான பொங்கலோ, சேலையோ  இவையெல்லாம் எப்படிக் கிடைக்கிறது என்பதை அவர் எடுத்துக் காட்டி, ஒரு குடும்பத்திலே வாழ்கின்ற அல்லது வாழ முடியாத வாழ்க்கையை சலிப்பாகக்  கருதுகின்றவர்களுக்குக்கூட, அவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆட்சியிலே நடைபெறுகின்ற நன்மைகளையெல்லாம் அவர் கூட்டங்களிலே தொகுத்துச் சொல்வார் என்று  கேள்விப்பட்டேன்; அதை நாளிதழ்களில் படித்தும் இருக்கிறேன். இப்போது இங்கே துரைமுருகனே சேலை கட்டிக் கொண்டு, மேடையிலே அமர்ந்து பேசியதைப் போல, யசோதா அம்மையார் நம்முடைய கழக ஆட்சியினுடைய திட்டங்களையெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.  அதை மிக அருமையாகவும் சொன்னார்கள். “சொல்வார்கள்” - எதிர்காலத்திலும் அதைச் சொல்வார்கள்.

ஏனென்றால், இன்று சொன்னதை நாளை மறந்து விடுவது சிலருடைய பழக்கம் குறிப்பாகப் பெண்களுக்கு அந்த மறதி இல்லை. அப்படி அதை மறந்து பேசினால், அவர்கள் பெண்களே அல்ல. ஆகவே, இன்றைக்கு தாய் உள்ளத்தோடு இந்த அரசு செயல்படுகிறது என்று அவர் சொன்னதை, நாளைக்கும் சொல்வார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதை யாரும் அரசியலாக்கி விடாதீர்கள் என்று பத்திரிகைகாரர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

அவரைப் போன்று, இந்த அளவிற்கு அடுக்கடுக்காக இந்த ஆட்சியினுடைய சாதனைகளை எடுத்துச் சொல்ல, திராவிட முன்னேற்றக் கழக மேடையிலேகூட அவ்வளவு தகுதி வாய்ந்தவர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அம்மையார் அவர்கள் அந்த அளவிற்கு இந்த ஆட்சியினுடைய சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். என்ன சாதனை? வேறு யாருக்கோ செய்கிற சாதனையா? அல்ல. அடித்தட்டு மக்கள், ஏழையெளிய மக்கள், சாதாரண மக்கள், சாமான்ய மக்கள் அந்த மக்களுக்கு செய்கின்ற சாதனைகளைத்தான் இங்கே அவர் அடுக்கடுக்காகச் சொன்னார்.   அந்தச் சாதனைகளைச் செய்கின்ற இந்த அரசு அந்தச் சாதனைகளிலே ஒன்றாகத்தான் பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலவச வேட்டி சேலைகளை வழங்குகிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்கு, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, கிராமப்புறத்துக் கைவினைஞர்களுக்கு, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கு என்று அனைவருக்கும் இலவச வேட்டி சேலைகள்  வழங்கப்படுகின்றன.
  
1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம். அப்போதும் கழக ஆட்சிதான். கழக ஆட்சியில்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இடையிடையே சிலர் இதை நிறுத்தி விட்டாலும்கூட, கழக ஆட்சி அதை மீண்டும் மீண்டும் தொடர்ந்த காரணத்தால்தான், இன்றைக்குத் இந்தத் திட்டம் தொடருகிறது. இந்தத் திட்டம் இனியும் தொடர வேண்டுமேயானால், கழக ஆட்சி தொடர வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

இந்த ஆண்டு மாத்திரம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 59 இலட்சத்து 4 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 58 இலட்சத்து 19 ஆயிரம் வேட்டிகளும், ஆக மொத்தம் 3 கோடியே 17 இலட்சத்து 23 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கு ஆகும் செலவு 256 கோடி ரூபாய். வேட்டி,சேலை பெற்றுப் பயன்படுத்துகின்றவர்கள் மாத்திரம் இந்தத் திட்டத்தால் பயன் அடைவதில்லை. இதை நெய்து கொடுக்கின்றார்களே நெசவாளர்கள், அவர்களுக்கும் இது பயன்படக்கூடிய ஒன்று. “நெசவாளர்களுடைய துயர் துடைக்க செந்தமிழ் நாட்டு வேட்டி,சேலை வாங்குவீர்” என்று உடுமலை நாராயணகவி எழுதி, அதை ஊரெல்லாம் பாடி, அறிஞர் அண்ணாவும் நானும், கழகத்தினுடைய காவலர்களும், தோள்களிலே கைத்தறி மூட்டைகளைச் சுமந்து விற்ற அந்தக் காலத்தை எண்ணிப் பார்க்கிறேன். 

இன்றைக்கு அந்தக் கைத்தறிக்குக் கிடைத்திருக்கின்ற மதிப்பு, மரியாதை, கிராக்கி இவைகளையும் நான் எண்ணிப் பார்க்கிறேன். ஆகவே, இந்த 1 கோடியே 59 இலட்சத்து 4 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 58 இலட்சத்து 19 ஆயிரம் வேட்டிகளும், ஆக மொத்தம் 3 கோடியே 17 இலட்சத்து 23 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்றால், இது ஒரு சாதாரண காரியம் அல்ல.  இது ஒரு ஆழ்ந்த பொருளாதாரத் தத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறது.

நெசவாளர்களுடைய குடும்பங்களுடைய கண்ணீரை இது துடைக்கின்றது. ஒரு காலத்திலே  நெசவாளர்கள் இல்லங்களிலே தற்கொலைகள் நிகழ்ந்தன. அப்படிப்பட்ட அளவிற்கு அவர்களுடைய வாழ்விலே தரித்திரம் தாண்டவமாடியது. நெசவாளி தன்னுடைய இயந்திரத்தை முடுக்கி விட முடியாமல், எத்தனையோ நெசவாளர்களுடைய வீடுகளிலே நெசவு செய்கின்ற தறிகள்  தூங்கிக்  கொண்டிருந்தன. அந்தத் தூக்கத்தைத் தட்டியெழுப்பி, இன்றைக்கு அவனும் “சீமான்” ஆகலாம் - அவனும் பொருளாதாரத்திலே உயரலாம் அவனும் மற்றவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு வாழலாம் என்ற அளவிற்கு ஒரு பொருளாதார வளர்ச்சியைத் தமிழகத்திலே இந்த அரசு உருவாக்கியிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இந்தத் திட்டத்தின்மூலம், 217 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலுள்ள 11 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும், 121 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலுள்ள 40 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெற்றுப் பயனடைந்திருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது.
   
“எல்லோர்க்கும் எல்லாமென்றிருப்ப தான  இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலுக்கேற்ப, “எல்லோர்க்கும் எல்லாம்” என்று இருப்பதான உலகத்தை நோக்கி நடக்கின்ற இந்த வையத்திற்கு உறுதுணையாக இருப்பதுதான் கழக அரசு. கழக அரசினுடைய சாதனைகளிலே ஒன்றுதான், இங்கே நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியிலே மகிழ்ச்சியோடு வந்து கலந்து கொண்டிருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் முன்னதாகவே “தமிழர் திருநாள்” வாழ்த்துக்களைத்  தெரிவித்து ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து பொங்கல் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து “பொங்கல் வாழ்க - தமிழர் திருநாள் வாழ்க” என்று  - தமிழர் இனம் வாழ, திராவிட இனம் செழித்திட உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துரை வழங்கி, விடைபெறுகிறேன்.

Comments

மிக நீண்ட பதிவு. இரண்டு தனித்தனி விஷயங்களை சேர்த்துப் போட்டிருக்கிறீர்கள்.
தமிழ் பஞ்சாங்கம் அறுபது ஆண்டுகளைக்கொண்டது என்பதால், குழப்பம் ஏற்படும்; சரியே. அதை எண் குறியீட்டால் அழைத்தால், இது தவிர்க்கப் படும்.
முயலலாம்.
ஆனால், ஆண்டு என்பது, சூரியன்/பூமி இடையில் இருக்கும் கோணம், தூரம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதாவது வானஇயலைச் சார்ந்தது. அதனால் தான் தை முதல் மாதம் சூரியன் கடக் ரேகையைத் தொட்டு திரும்பும் நாளாக எப்போதுமே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு வருவதற்கு சில ஆண்டுகளை லீப் ஆண்டுகளாக (ஆடியில் முப்பத்து இரண்டு அல்லது முப்பத்து ஒன்று நாட்களுடன், அல்லது மார்கழியில் முப்பது நாட்கள் கொண்டு அமைக்கப் படுகிறது.),
இவ்வாறு பஞ்சாங்க அடிப்படையில் மாதங்கள் இருக்கும் பொது, ஆண்டின் முதல் நாள் தை முதல் நாளாகவும் இருக்கலாம். நீங்கள் சொல்லயுள்ள ஐந்நூறு பேர் ஆய்வில் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இருந்தால் (எந்த பஞ்சாங்கமாகவும் இருக்கலாம்; கிறேகமோ, லத்தீனோ, ஆரியமோ, தமிழோ எதுவாகவும் இருக்கலாம்) தை முதல் நாள் ஆண்டு முதல் நாளாக இருக்கலாம்.
என்னைப் போன்றவர்க்கு, அந்த ஆய்வின் சுருக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். (தமிழக கலைஞர் அரசு அரசு வெளியீட்டின் பொது இது சுட்டப் பட்டு இருக்கலாம். வெளி மாநிலங்களில் உள்ள என்னைப் போன்ற தமிழர்களுக்கு காணக் கிடைக்கவில்லை. )

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி