Skip to main content

ஆணையர்களை நியமிக்க 'விஜயகாந்த்' தடை! பரிதாபத்தில் தகவல் அறியும் உரிமை ஆணையம்

2012 செப்டம்பர் 5 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது!



மிழகத்தில் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஏன் மற்றவர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்று கேட்டால், சொல்லப்படும் காரணம் விஜயகாந்த்! 
அரசு அலுவலங்களில் ஒளிவு மறைவு இல்லாத செயல்பாடும் ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டு கிடைக்காமல் போனால் மேல் முறையீடு செய்யலாம். மேல் முறையீடும் மறுக்கப்படும் பட்சத்தில் தகவல் ஆணையத்தில் முறையிடலாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநில அளவில் மாநிலத் தகவல் ஆணையங்களும்

ஆணையர்களை நியமிக்க 'விஜயகாந்த்' தடை!
செயல்பட்டு வருகின்றன. தகவல் தரவில்லை என்றால், அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க தகவல் ஆணையங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த ஆணையத்தில் காலியாக உள்ள இடங்களில் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்குப் போட்டிருக்கிறார் 'நீதியின் குரல்’ அமைப்பின் நிறுவனத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன்.
''லோக்பால் மசோதாவைவிட வலிமை வாய்ந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம். மற்ற மாநிலங்களில் இது சிறப்பாகச் செயல்படும் நிலையில், தமிழகத் தகவல் ஆணையம் மட்டும் செயல் இழந்து கிடக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆணையர்களின் பதவியிடம் நிரப்பப்படாமலே இருக்கிறது. இதனால், 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் பைசல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. ஆணையர்கள் பற்றாக்குறையால் மனுக்கள் அரைகுறையாக மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன. தகவல் ஆணையம் ஒவ்வோர் ஆண்டும் ஆண்டறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அதையும் செய்யத் தவறிவிட்டது. 2006 - 2007-ம் ஆண்டுக்கான அறிக்கையை கடந்த
ஆணையர்களை நியமிக்க 'விஜயகாந்த்' தடை!
சட்ட சபைக் கூட்டத் தொடரில்தான் வைத்தார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அறிக்கைகள் பாக்கி உள்ளன. அதனால், உடனே ஆணையர்களை நியமிக்க வேண்டும்'' என்று கொதிக்கிறார் பாஸ்கரன். இவர் தாக்கல் செய்த வழக்கில் நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்கச் சொல்லி இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
''மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தகவல் ஆணையம் முடங்கிப்போனதுக்குக் காரணமே அரசியல்தான். ஆட்சியாளர்களின் நலம் விரும்பிகளுக்கு போஸ்ட்டிங் போடும் இடமாக மாறிவிட்டன தகவல் ஆணையர்களின் பதவி இடங்கள்'' என்கிறார் தகவல் அறியும் உரிமைப் போராளி கோபால கிருஷ்ணன். ''தமிழகத்தின் தலைமைத் தகவல் ஆணையராக இருக்கும் ஸ்ரீபதி, தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்தவர். மாநில முதல்வரும், ஓர் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும்கொண்ட ஒரு கமிட்டிதான் தகவல் ஆணையரை நியமிக்க முடியும். அப்போதையை எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவை அழைத்து ஆலோசிக்காமலேயே ஸ்ரீபதியை நியமித்தனர். ஸ்ரீபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கே எதிரானவர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்துக் கணக்கைக் கேட்டு மாதவ் என்பவர் மனு போட்டபோது 'அது தனிப்பட்ட விஷயம். தர முடியாது’ என்று அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதி சொன்னார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடித்தான் மாதவ் வெற்றி பெற்றார். அப்படிப்பட்டவரை இந்த ஆணையத்துக்கு நியமித்தார் கருணாநிதி.
விஜிலன்ஸ் கமிஷனராக ஸ்ரீபதி இருந்தபோது 'ஊழல் தடுப்புக் கண்காணிப்பு இயக்குனரகம் ஆர்.டி.ஐ-யின் கட்டுப் பாட்டுக்குள் வராது’ என்றார். ஸ்ரீபதி நியமிக்கப்பட்ட நேரத்தில் 'தகவல் ஆணையர் நியமனம் தொடர்பாக எனக்கு எந்த ஆவணங்களும் தரவில்லை’ என்று, அப்போது காட்டமாக அறிக்கைவிட்ட ஜெயலலிதா, இப்போது முதல்வராக இருக்கிறார். ஆனால், அவரும் காலியான பதவியிடங்களுக்கு ஆணையர்களை நியமிக்காமல் அசட்டையாக இருக்கிறார்'' என்றார் வேதனையுடன்.  
'ஆணையர்களை நியமிக்க வேண்டும்’ என சட்டசபையில் சௌந்தரராஜனும் (சி.பி.எம்.) ஜவாஹிருல்லாவும் (மனிதநேய மக்கள் கட்சி) கோரிக்கை வைத்தும், ஜெயலலிதா இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. ஆணையர்களை நியமிப்பதாக இருந்தால் ஸ்ரீபதிக்குக் கீழேதான் நியமிக்க முடியும். அவருக்குக் கீழே தனக்கு வேண்டியவர்களை நியமிப்பது தகுதிக் குறைவாக ஜெயலலிதா கருதுவதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மேலும், ஸ்ரீபதியை தலைமை ஆணையர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு இல்லை. ஆனால், ஸ்ரீபதியை எப்படியாவது பதவியில் இருந்து தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  'ஒருதலைபட்சமாக செயல்படும் ஸ்ரீபதியை பதவியில் இருந்து கவர்னர்தான் நீக்க வேண்டும். அதற்கு நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று, சேது என்பவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதன் தீர்ப்பு வந்த பிறகே அரசு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்கிறார்கள். அதற்குள் அந்தப் பதவியில் உட்கார இப்போதே பலர் போட்டி போடுகின்றனர்.
இதைத் தாண்டியும் ஆணையர்களை நியமிப்பதில் ஜெயலலிதாவுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஆணையர் களைத் தேர்வு செய்யும்போது எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தையும் அழைக்க வேண்டும். இது நடக்கிற காரியமா என்ன? தமிழகத்தைப் பொறுத்தவரை தகவல் ஆணையம் அம்புட்டுத்தானா..?
எம். பரக்கத் அலி

கட்டுரை லிங்க்: https://www.vikatan.com/government-and-politics/politics/23498--2

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...