Skip to main content

10 தொகுதிகளை பெற்றது ஏன்?: திருமாவளவன் விளக்கம்

தி.மு.க. கூட்டணியில் 10 இடங்களை பெற்றது ஏன் என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 1) வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதென 28.02.2011 அன்று கூட்டணியின் தலைவர் முதல்வர் கலைஞருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறத்தக்க அளவிலான தொகுதிகளைப் பெற்று போட்டியிட வேண்டுமென்பது விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.

குறைந்தது பதினைந்து தொகுதிகளிலாவது போட்டியிட்டால்தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுமளவிலான இடங்களில் வெற்றி பெற இயலும். ஆகவேதான், பதினைந்து தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கோரியது. இது எமது தகுதிக்கு மீறியதாகவோ, அடாவடித்தனமான கோரிக்கையாகவோ யாரும் கருதிவிட இயலாது.

நாடுதழுவிய அளவில் 234 தொகுதிகளிலும் வாக்கு வங்கியைப் பெற்றுள்ளோம் என்பதைக் கடந்த 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் உறுதிப்படுத்தியிருக்கிறோம். ‘வட மாவட்டங்களில் மட்டும்’ அல்லது ‘மேற்கு’ அல்லது ‘தெற்கு மாவட்டங்களில் மட்டும்’ என்று ஒரு ‘பகுதி சார்ந்த’ கட்சியாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த கட்சியாகவோ இல்லாமல், தமிழகம் தழுவிய அளவிலும் அனைத்துத்தரப்பு மக்களும் அங்கம் வகிக்கும் அளவிலும் வளர்ச்சியடைந்துள்ள அரசியல் கட்சியாகும் விடுதலைச் சிறுத்தைகள்.

அண்மையில், நடந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் 45 இலட்சத்திற்கும் மேலானவர்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். சுமார் இருபதாயிரத்துக்கும் மேலான கிளைகள் புதியதாகக் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டமைப்புரீதியாக வலிமை பெற்றுள்ள, தீவிரமாக உழைக்கக்கூடிய களப்பணியாளர்களைக் கொண்டுள்ள கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், பத்து தொகுதிகளை மட்டுமே தி.மு.க கூட்டணியில் பெற முடிந்தது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் ஒரு ஏமாற்றமாகக் கருதுவதில் தவறேதும் இருக்க முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நெருக்கடியான சூழல்களில் தி.மு.க-வுக்கு உற்றத்துணையாய் இருந்து, நம்பிக்கைக்குரிய தோழர்களாய் இருந்து வாதாடியவர்கள், போராடியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். இதனால், கடுமையான விமர்சனங்களுக்கும் பொல்லாத வீண்பழிகளுக்கும் காழ்ப்புணர்ச்சி கொண்ட கயவர்களின் ஆதாரமில்லாத அவதூறுகளுக்கும் ஆளானவர்கள.இலாப-நட்டக் கணக்குப் பார்க்காமல், அரசியலில் நட்புக்கும் தோழமைக்கும் புதிய இலக்கணமாகச் செயலாற்றி வருபவர்கள்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க-விடம் தோழமையுடன் கூடிய ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதில் தவறென்ன இருக்கமுடியும்? எனினும், தற்போதுள்ள சூழலில் நடைமுறை சாத்தியக் கூறுகளைக் கணக்கில் கொண்டு, கூட்டணியிலுள்ள பிற கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்கிற ஒப்புரவுப் பாங்கோடு, கூட்டணியின் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்கிற தோழமையுணர்வோடு, எமது எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு அல்லது விட்டுக்கொடுத்து இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.

‘நடுக்கண்டம் எனக்கு’ என்று அடம்பிடிக்கும் போக்கில்லாமல், மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க ஒத்துழைக்க வேண்டுமென்கிற உயர்ந்த உள்ளத்தோடு உடன்பாடு கண்டுள்ளோம்! எண்ணிக்கையை மட்டுமே முன்னிறுத்தி அணி மாறுவோமென திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகளுக்கு மேலும் இடம் கொடுக்காமல் ‘அரசியலில் நம்பகத்தன்மையின் அடையாளம் விடுதலைச் சிறுத்தைகள்’ என்று மீண்டும் நிலைநாட்டும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம். இதில் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாக எண்ணுவது நமது ஆளுமையின்மீது நாமே கறைபூசுவதாக அமைந்துவிடும்.

அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும், அழுத்தமாகவும், ஆழமாகவும் வேர் விட்டு வலிமையோடு வளர்கிறோம். விடுதலைச் சிறுத்தைகளின் தூய தொண்டுக்கும் நட்புறவில் காட்டும் நம்பகத்தன்மைக்கும் உரிய மதிப்பை, வெகுமதியை, பொதுமக்கள் வழங்குவார்கள். நாம் பெற்ற 10 தொகுதிகளையும் வெற்றிபெற வைப்பார்கள். அந்த நம்பிக்கையோடு களமிறங்குவோம். ‘நாம் இடம் பெற்றுள்ள தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றிபெற்றது; தி.மு.க மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. என்கிற வரலாற்றுப் பதிவை இந்தத் தேர்தலில் உருவாக்குவோம்.

கூட்டணியின் ஒத்துழைப்போடும், பொதுமக்களின் நல்லாதரவோடும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றெடுப்போம். 2011-விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்பதை நிலைநாட்டுவோம். போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் 01.03.2011 முதல் 10.03.2011 வரை தலைமை அலுவலகத்தில் பெறப்படுகிறது. தவறாமல் விடுதலைச் சிறுத்தைகள் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டுகிறோம்.

Comments

pathu thokuthikku naalla vilakkam.. ithu saathik katchi illangka....! pakirvukku nanri.vaalththukkal

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.