Skip to main content

தி.மு.க.வில் சேர்ந்தார் சி.பி.எம். எம்.எல்.ஏ. கோவிந்தசாமி

திருப்பூர் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தமிழக அரசு பாராட்டு விழா எடுக்க போவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கோவிந்தசாமி இன்று (ஆகஸ்ட் 25) முதல்வர் கருணாநிதி முன்பு தி.மு.க.வில் இணைந்தார். இந்த இணைப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:


இன்று பல்லாயிரக் கணக்கில் திருப்பூர் பகுதியிலிருந்து தி.மு.க.வில் இணைவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலேயிருந்து வந்துள்ள கோவிந்தசாமியின் ஆதரவாளர்களை வரவேற்கிறேன். நான் திருப்பூர் உதாரணத்தைச் சொல்ல வேண்டுமேயானால் - திருப்பூர் பனியனுக்குப் பெயர் பெற்ற ஊர். அதனால் பனியன், சட்டை உதாரணத்தையே சொல்கிறேன். ஒரு மனிதன் உடை உடுத்துகின்ற நேரத்தில் பனியனை முதலிலே போட்டுக் கொண்டு, அதற்குப் பிறகுதான் சட்டையை அணிந்து கொள்வான். என் வழக்கம் அப்படித்தான். இப்பொழுது பனியன் போன்ற உங்களை யெல்லாம் அணிந்திருக்கிறேன், இணைத்திருக்கிறேன். பனியன் போட்டு முடிந்த பிறகு சட்டை எப்போது அணியப் போகிறேன் என்பதை விரைவில் நீங்கள் அறிந்து கொள்ளவிருக்கிறீர்கள்.

எனக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உடைத்து - அதைக் கலகலக்கச் செய்து - அதிலேயிருந்து ஆயிரக்கணக்கானவர்களை தி.மு.க.விற்கு இழுக்க வேண்டுமென்ற எண்ணம் எதுவும் இல்லை. அப்படிப் பட்ட அடிப்படை நோக்கம் கொண்டவனல்ல நான். ஆனால் நல்ல எண்ணம் கொண்ட ஒரு கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டுமென்று யார் எண்ணினாலும் - அவர்களுக்கு அஞ்சக் கூடியவனல்லன் நான். என்பதை பல நேரங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். அந்த வகையில்தான் இன்றைக்கு இந்த இணைப்பு விழாவில் வருகை தந்துள்ள ஆயிரக்கணக்கான உங்களையெல்லாம் யாரை “நண்பர்களே” என்று அழைத்தேனோ, யாரை “தோழர்களே” என்று அழைத்தேனோ அத்தகைய உங்களையெல்லாம் “வாருங்கள் உடன்பிறப்புக்களே” என்று அழைத்திருக்கிறேன்.

நான் என்னுடைய பொது வாழ்வு - அரசியல் வாழ்வு என்று எடுத்துக் கொண்டால், என்னுடைய பதினான்காவது வயதில் அரசியல் வாழ்வில் ஈடுபட்டேன். தந்தை பெரியாரின் பேச்சைக் கேட்டு - பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரிசாமியின் பேச்சைக் கேட்டு - அண்ணன் ஜீவானந்தத்தின் பேச்சைக் கேட்டு - இந்த அரசியல் கொள்கைகளில் நாட்டம் கொண்டவன் நான். உங்களுக்கு இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமேயானால், நான் பிறந்த மாவட்டம், பிறந்த ஊர்ப் பகுதி, பிறந்த வட்டாரம் - விவசாயத் தொழிலாளர்கள் நிரம்பிய வட்டாரம். அண்மையில் தஞ்சை மாவட்டத்தில், திருத்துரைப்பூண்டி பகுதியில் ஸ்டாலின் திறந்து வைத்தாரே “சீனிவாச ராவ் மணி மண்டபம்” அந்த மண்டபத்திற்கு உரியவரான மண்டபத்தில் ஒளி விட்டுக் கொண்டிருக்கின்ற சீனிவாச ராவவை நான் நன்கறிவேன். அவர் ஏழையெளிய பாட்டாளி மக்களுக்காக - குறிப்பாக ஆதி திராவிட மக்களுக்காக - விவசாயத் தொழிலாளர்களுக்காக வியர்வை சிந்தியவர். ரத்தம் சிந்தவும் தயாராக களத்திலே நின்றவர். அவருடைய பெயரை இன்றைக்கு எத்தனை அரசியல் கட்சிகள் ஞாபகத்திலே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், தியாகிகள் வரிசையில் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று சீனிவாச ராவ் அவர்களுடைய பெயராகும்.

அதைப் போலவே அவரோடு தோளோடு தோள் நின்று பாடுபட்ட அண்ணன் ஜீவானந்தம் அவர்களையும், நான் ஏதோவொரு கட்சியின் தலைவன், ஒரு கட்சியிலே உள்ள தளபதி என்றில்லாமல், எனக்கு மிக நெருக்கமான ஒரு கட்சியின் தளகர்த்தராக நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.பாராட்டியிருக்கிறேன். அவரோடு சேர்ந்து உழைத்திருக்கிறேன், பாடுபட்டிருக்கிறேன்.

அதைப் போலவே மணலி கந்தசாமி - அவர் சுயமரியாதை இயக்கத்திலே பற்று கொண்டவர். திராவிட இயக்கத்திலே பாசம் கொண்டவர். இதை விட அதிகமாக கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்திலே அவருடைய தலைக்கு அன்றிருந்த சர்க்காரால் விலை நிர்ணயம் செய்யப்பட்டதெல்லாம் உண்டு. அப்படிப்பட்ட மணலி கந்தசாமி, ஜீவானந்தம் போன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களோடு ஒன்றிக் கலந்த உணர்வோடு உழைத்தவன் நான். எனவேதான் எனக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ஒரு பந்தப்பாசம் உண்டு என்பதை பலரும் அறிவார்கள். இன்றைக்குக் கூட நான் இடதுசாரி கம்யூனிஸ்ட் இயக்கங்களில் வலது, இடது என்று பிரிக்கப்பட்ட இந்த இயக்கங்களில் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என்று இரண்டாகப் பிரிந்திருந்தாலும் இரண்டு தலைமையிலே உள்ளவர்களுக்கும் நான் நெருக்கமான நண்பனாக விளங்கியவன்.

அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இன்றைக்கும் நண்பனாக இருப்பவன். அவர்கள் ஒருவேளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். காரணம், அவர்கள் இன்றைக்கு சேர்ந்து இருக்கின்ற இடம் அப்படி. அதனால்தான் ஒரு உண்மைத் தொண்டனாகிய நம்முடைய கோவிந்தசாமியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் “சேர்வார் தோஷம்” - சேர்ந்த இடம் அப்படி. அதனால்தான் கோவிந்தசாமியின் தியாகம், உழைப்பு, பேச்சாற்றல், செயலாற்றல் ஆகியவற்றை அவர்கள் பொருள்படுத்தவில்லை. பொருள்படுத்தாமலே அவரைப் போக விட்டு விட்டார்கள். “போ” என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். அந்த அளவிற்கு அவருக்கு ஒரு சோதனை வந்திருப்பதை நீங்களும், நானும் நன்றாக உணருகின்றோம்.

அவர் இங்கே வந்திருப்பது ஆறுதல் பெறுவதற்காகத்தான். அவரை கட்டுப்பாடு என்று கூறி, அவரை கட்சியிலேயிருந்து “வெளியேறு” என்று கட்டளையிட்ட போது - அவர் இங்கே குறிப்பிட்டதைப் போல - நான் அவரை அழைத்துப் பேசியது - அவர்கள் போனால் போகிறார்கள், என் கட்சிக்கு வா - என்று சொல்கிற அற்பப் புத்தியோடு அல்ல. நான் அன்றைக்குப் பேசியது இவ்வளவு பெரிய ஒரு உன்னதமான உழைப்பாளி, இந்தக் கட்சியின் தளபதியாகப் பாடுபட்டவர், அவருக்கு இந்தச் சோதனை என்ற போது எப்படி தாங்கிக் கொள்வார் என்பதற்காகத்தான், அவரை அழைத்து மருந்து தடவினேனே தவிர அவருக்கு நான் ஆறுதல் கூறினேனே அல்லாமல், ஆசை காட்டி இங்கே வந்து விடு என்றல்ல.

ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கும் இருக்கிறார், தோழர் க.சுப்பு. அவரைக் கேட்டால் தெரியும். நான் இரண்டாவது முறையாக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த அந்த நேரத்தில் ஒரு நாள் காலை பத்து மணியளவில், சட்டமன்றத்திலே கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்த போது -மணலி கந்தசாமியும் சுப்புவும் வந்தார்கள். சுப்பு மணலி கந்தசாமியின் மாணவரைப் போல. மணலி கந்தசாமியின் சுக துக்கங்களில் பங்கு கொண்டவர். அப்படிப்பட்ட சுப்பு ஆற்றல் மிக்கப் பேச்சாளர். இன்றைக்கும் அவர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படி வேடிக்கையாகவும், அதே நேரத்திலே அறிவு பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் பேசக் கூடியவர். அவரும் மணலியும் நானும் பேசிக் கொண்டிருந்த போது - சுப்பு சொன்னார் - மணலி உங்கள் தலைமையிலே தி.மு. கழகத்திலே சேர விரும்புகிறார் என்றார். எண்ணிப் பாருங்கள். அவ்வளவு பெரிய தலைவர், தி.மு.க. விற்கு வருகிறேன் என்று சொன்ன போது, நான் என்ன செய்திருக்க வேண்டும்? வாருங்கள், வாருங்கள் என்றல்லவா அழைத்திருக்க வேண்டும். அப்படி அழைக்கவில்லை. வேண்டாம், நீங்கள் வந்தாலும் நான் உங்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னேன். ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று மணலி கேட்டார். நான் சொன்னேன் - நீங்கள் பெரிய தலைவர், பல தியாகங்களைச் செய்தவர், நீங்கள் தலைவராக இருந்த போது - உங்கள் வீட்டிற்கே போகாமல் ஊரெல்லாம் சுற்றிய போது - உங்கள் வீட்டில் வந்து விசாரித்த போலீஸ் அதிகாரிகளிடம் உங்கள் மனைவி என்ன சொன்னார்கள் என்ற அந்த வசனங்கள் எல்லாம் எனக்கு மனப்பாடம்.

அப்படிப்பட்ட பெருந் தலைவர் நீங்கள். அந்தக் கட்சியிலிருந்து நீங்கள் இந்தக் கட்சிக்கு வரக் கூடாது. நீங்கள் வருவது எனக்குப் பெருமை என்றாலுங்கூட உங்களுக்குப் பெருமை ஆகாது, ஆகவே நீங்கள் அங்கேயே இருக்க வேண்டுமென்று சொன்னேன். இல்லையில்லை, என்னால் அங்கே இருக்க முடியாது, உன்னைப் புகழ்வதையே, உன் ஆட்சியைப் பாராட்டுவதையே என் கட்சிக் காரர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகவே நான் அங்கிருந்து பிரிந்து தி.மு.க.விற்கு வந்து விடுகிறேன் என்றார். நான் தம்பி சுப்புவிடம் சொல்லி, அவரைச் சமாதானப்படுத்தி, அங்கேயே இருங்கள் என்று சொன்ன போது மணலிக்குக் கோபம் வந்து, நீ என்னை வேண்டாமென்று சொன்னால் நான் வேறு கட்சிக்கே போய் விடுகிறேன் என்று சொல்லி விட்டு, வேறு கட்சிக்கே போய் விட்டார். இது மணலியின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம். மணலி என்றால் உங்களில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

கம்யூனிஸ்ட் இயக்கத்திலே ஒரு பெரிய தளபதியின் பெயர் அது. கம்யூனிஸ்ட் இயக்கத்திலே ஒரு தியாகியின் பெயர் மணலி கந்தசாமி என்பது. அந்த மணலி, திருத்துரைப்பூண்டியில் நடைபெற்ற ஒரு விழாவிலே என்ன பேசினார் தெரியுமா? கருணாநிதி முதல் அமைச்சர், இன்றைக்கு அவர் தமிழ்நாட்டிலே உள்ள விவசாயிகளுக்கெல்லாம், அவர்கள் தங்கியிருக்கின்ற இடங்களை மிராசுதாரர்களிடமிருந்து மாற்றி, விவசாயிகளின் சொந்த இடங்களாக மாற்றியிருக்கிறார். இந்த மாற்றத்திற்காக ஒரு சட்டமே கொண்டு வந்திருக்கிறார். இது குடியிருப்புதாரர்கள் மனை உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி இனிமேல் அவர்களை காலி செய்யச் சொல்ல முடியாது. அவர்கள் குடியிருந்த இடம் அவர்களுக்கே சொந்தம். இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக எங்கள் கம்யூனிஸ்ட் இயக்கம் சிந்தாத ரத்தம் இல்லை, கொடுக்காத உயிர் இல்லை.

அப்போதெல்லாம் கிடைக்காத இந்தச் சுதந்திரம், இன்றைக்கு கருணாநிதியின் பேனாவிலிருந்து சிந்திய ஒரு துளி மையினால் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று பெரியவர் மணலி கந்தசாமி அவர்கள் அந்தக் கூட்டத்திலே பேசினார்.

அந்தச் சட்டம் வந்ததின் காரணமாக இன்றைக்கும் அந்த வட்டாரத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள், அந்தச் சட்டத்தின் பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் மணலி கந்தசாமி - அவர்கள் எல்லாம் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம். இங்கே கோவிந்தசாமி பேசும்போது நான் அவர்களுடைய பிறந்த நாள் விழாவிற்கு சென்றால் கூட, அதைக் குற்றம் என்கிறார்கள், நான் என்ன செய்வேன் என்று கேட்டார். உங்களுக்குச் சொல்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு தியாக சீலர் - இன்றைக்கு இல்லை - மறைந்து விட்டார் - பெயர் வி.பி. சிந்தன் - அவர் என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் விழாவிற்கும் என் வீட்டிற்கு வருவார் -ஒரு சிகப்புத் துண்டை போர்த்துவார் - போர்த்திக் கொண்டே சொல்வார் - இது எங்கள் கட்சி அனுமதிக்காத ஒன்று, இருந்தாலும் உங்களிடம் உள்ள தனிப்பட்ட அன்பின் காரணமாக இதை உங்களுக்கு அணிவிக்கிறேன் என்று சொல்லி அணிவிப்பார் வி.பி. சிந்தன். இப்படியெல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கத்திலே நண்பர்கள், தலைவர்கள் உண்டு. அவர்களுடைய வழியைப் பின்பற்றினார் கோவிந்தசாமி என்பதற்காக அவருக்கு தண்டனை தரப்பட்டது.

அந்தத் தண்டனையை அவர்கள் நிறைவேற்றுகின்ற தருணத்தில் நான் அவருக்கு உங்கள் சார்பாக அபயம் அளித்திருக்கிறேன். நீங்களும் என்னோடு சேர்ந்து அவருக்கு அபயம் அளித்திருக்கிறீர்கள். அது தான் இந்த விழா என்பதை நீங்களும் அறிவீர்கள், நானும் அறிவேன். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆனாலும், இந்தியக் கம்யூனிஸ்ட் ஆனாலும் அவர்கள் அடிக்கடி தங்களுடைய கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள் அல்ல. ஆனால் ஏதோ ஒரு மாயை இப்போது - அவர்கள் தங்களுடைய “கொள்கையை மாற்றுவதையே தங்களுடைய கொள்கையாக” ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது?

நேற்றுவரையிலே ஜெயலலிதாவினுடைய நில ஆக்கிரமிப்புகள் - தாழ்த்தப்பட்ட மக்களுடைய வீடுகளை ஆக்கிரமித்த இந்தச் செய்திகள் அவர்களுக்குத் தெரிந்தது – சிறுதாவூர் பற்றி அரசிடம் கொண்டு வந்து மனு கொடுத்து, அதை காலி செய்யச் சொன்னவர்களும் இதே கம்யூனிஸ்ட்கள்தான்; இன்றைக்கு அதைப் பற்றி மூச்சு விடாமல் இருப்பவர்களும் இதே கம்யூனிஸ்ட்கள் தான்! இதை நான் சொல்வதற்குக் காரணம், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்பதிலே அவர்கள் தலைகீழாக நிற்கிறார்கள். அதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு இன்றைக்கு தி.மு.க. அரசை, சாதனைகளையெல்லாம் மறைக்கப் பார்க்கிறார்கள். மறைத்துக் கொண்டும் வருகிறார்கள். நிச்சயமாக அதை மறைக்கவும் முடியாது. அரசின் சாதனைகள் மங்கவும் மங்காது. நாள்தோறும் பெருகிக் கொண்டிருக்கின்ற - அலைஅலையாக வருகின்ற உங்களுடைய ஆதரவு தி.மு. கழகத்திற்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்ற அந்த உறுதியை நான் இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.

ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இது கூட நம்முடைய கோவிந்தசாமி மீது - அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிவ புண்ணியம் மீது - அந்த இரண்டு கட்சித் தலைமையும் நடவடிக்கை எடுக்கலாம். சட்டமன்றக் கூடத்தில் பல தலைவர்களுடைய படங்கள் எல்லாம் வைக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். ராஜாஜி படம், பெரியார் படம், அண்ணா படம், எம்.ஜி.ஆர். படம், என் படம் என்று இந்தப் படங்கள் எல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நாள் நம்முடைய சிவபுண்ணியம் என்னைப் பார்த்து, எல்லா படங்களையும் வைத்திருக்கிறீர்கள், உங்களுக்கு ஜீவானந்தம் அவர்களிடம் அளவற்ற அன்பு உண்டு, “அண்ணன், அண்ணன்” என்று சொல்வீர்களே, அந்த அண்ணன் ஜீவானந்தம் படம் வைக்க வேண்டாமா என்று கேட்டார். அவரோடு சேர்ந்து கொண்டு கோவிந்தசாமியும் இதே கேள்வியைக் கேட்டார். நான் அப்போது அதற்கான நேரம் வரும், வைக்கப் படும் என்று சொன்னேன். இப்போது நேரம் வந்து விட்டது, அந்த ஜீவா னந்தம் படமும் அந்த மண்டபத்திலே, இந்த நாளை முன்னிட்டு வைக்கப்படும். இந்த நாள் எந்த நாள் என்றால், கோவிந்தசாமியின் தலைமையில் திருப்பூர் வட்டாரத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் அங்கிருந்து வந்து தி.மு. கழகத்திலே இணைகிறோம் என்று சொல்கிற இந்த நாள் - இந்த நாளை நான் நெஞ்சிலே தாங்கி நம்முடைய ஜீவானந்தம் அவர்களிடம் படம் கோட்டை கொத்தளத்திலே, சட்டமன்றம் நடைபெறுகின்ற இடத்திலே வைக்கப்படும். இது அவருக்கு நான் காட்டுகின்ற மரியாதை.

Comments

தலைப்பை மாத்துங்க நண்பரே....
இன்னும் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தி.மு.க.வில் அதிகாரபூர்வமாக இணையவில்லை.
எம்.எல்.ஏ. கோவிந்தசாமியை கட்சியில் இருந்து நீக்கியதாக மார்க்சிஸ்ட் இன்னும் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கவில்லையாம். இப்போது அவர் தி.மு.க.வில் இணைந்தால் எம்.எல்.ஏ. பதவி காணாமல் போய்விடும். எனவே கடிதம் சபாநாயகரிடம் வந்த பின்னர் தான் அவர் தி.மு.க.வில் சேருவார்.
vijayan said…
இந்த மனிதர் எழுதிய "திரும்பி பார்" திரைப்படத்தை பார்த்தாலே இவருக்கு கம்யூனிஸ்ட் களை பற்றி உள்ள மரியாதை புரியும்.விவசாய தொழிலாளிகளை கீழ் வெண்மணியில் பொசுக்கியது இந்த மனிதரின் கட்சியின் ஆட்சியின் போதுதான்.கம்யூனிஸ்ட் கவி பட்டுக்கோட்டை "இந்த திண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி என்றது இந்த கூட்டத்தை பார்த்துதான்.

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி