Skip to main content

தியாகுவின் ஜெயில் நினைவுகள்!


2009 மார்ச் 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது!


''பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் படப்பிடிப்பு, நான் சிறையில் இருந்தபோதுதான் நடந்தது. அப்போது சிறையில் இரண்டு கறுப்புப் பூனைகள் இருக்கும். ஒன்றை நாங்கள் வளர்த்தோம். மற்றொன்றை சிறைக் கண்காணிப்பாளர் விஜய நாராயணன் வளர்த்து வந்தார். அவர் அறையில் இருக்கும் போன் பெல் அடித்தாலே, அவரை அழைத்து வரும் அளவுக்குத் திறமையானது அந்தக் கறுப்புப் பூனை. இதைப் பார்த்த பாரதிராஜா, அந்தப் பூனையைப் படத்தில் நடிக்க வைத்தார்...''

தியாகுவின் ஜெயில் நினைவுகள்!
பொதுமக்களின் திடீர் பிக்னிக் ஸ்பாட்டாக தற்போது மாறியிருக்கும் இடம் சென்னை சென்ட்ரல் ஜெயில். மத்திய சிறை புழலுக்கு மாற்றப்பட்டு விட்டதால், பழைய சிறையை இடிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.அப்படி இடிப்பதற்கு முன்பு, அதை பொதுமக்களின் காட்சிக்காகக் காவல் துறை திறந்து வைத்திருக்கிறது.
நாமும் நம் பங்குக்கு 'தமிழ்த் தேசிய விடுதலை இயக்க'த்தின் பொதுச்செயலாளர் தியாகுவுடன் சிறைவலம் வந்தோம். அப்போதுதான் மேற்கண்ட 'பாரதிராஜா' நினைவுகளில் மூழ்கினார் தியாகு. ஜூ.வி-யில் 'சுவருக் குள் சித்திரங்கள்', 'கம்பிக்குள் வெளிச்சங்கள்' ஆகிய தொடர்களை எழுதிய தியாகு, இந்தச் சிறையில் பல ஆண்டுகள் அரசியல் கைதியாகஇருந்தவர்.
சிறை விசிட்டுக்கு நாம் அழைத்தபோது, ''நானே என் வீட்டில் இருப்பவர்களை அழைத்துப்போய்க் காட்டலாம் என்றுதான் இருந்தேன்...'' என்றபடி காரில் ஏறினார் தியாகு. அவருடன் முதல் வகுப்பு படிக்கும் அவர் மகன் சமரன். சிறைச்சாலைக்குள் நுழைந்தோம். ஜெயிலைக் காண தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் பீடி, சிகரெட், பான்பராக், வாட்டர் பாக்கெட், சுண்டல், நொறுக்குத் தீனிகள், ஐஸ்கிரீம் விற்கும் 'திடீர்' கடைகளும் சிறைக்குள் முளைத்திருந்தன.
தியாகு முதலில், தான் அடைக்கப்பட்டிருந்த 'ம.த.கூ.' என்று எழுதப்பட்ட கட்டடத்துக்குள் போனார்.
''ம.த.கூ. என்றால் 'மரண தண்டனைக் கூடம்'. இங்குதான் என்னை முதலில் அடைத்தார்கள். ஆரம்ப காலத்தில் இந்த குவாரன்டைன்-2 பகுதியாக இருந்தது. கைதிகள் உள்ளே வரும்போது, அவர்களை சில நாட்களுக்கு இங்கேதான் வைப்பார்கள். அப்படித்தான் 1971 பிப்ரவரி மாதத்தில் ஓர் இரவு இங்கு கொண்டுவரப்பட்டேன். 72 வரை இந்த அறையில்தான் இருந்தேன். தனிமைச் சிறையின் உள்ளே பைபிள், சிலுவை போன்றவை இருந்தன. மரண தண்டனைக் கைதிகளிடம் வார்டன்கள், 'உங்கள் கடைசி விருப்பம் என்ன?' என்று கேட்பது என் காதுகளில் விழும்...'' என்று சொல்லிக்கொண்டே வந்தபோது தியாகு, முதலில் அடைக்கப்பட்டிருந்த அறை வந்தது. உள்ளே ஒரு ஆள் படுத்துக்கொள்ளும் அளவுக்கு திண்டு. பக்கத்திலேயே டாய்லெட். அந்த திண்டில் உட்கார்ந்து விட்டத்தை வெறித்தபடி பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார்.
''ஒருவர் சிறையில் இருந்ததற்கான ஆதாரப் பதிவு, சிறை ஏடுகளில் மட்டும்தான் இருக்கும். ஆனால், இப்போது புகைப்படமும் எடுக்கும் வாய்ப்பு...'' என்று சொல்லி சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நின்று படமெடுத்துக்கொண்டார். கம்பிகளை ஒவ்வொன்றாக எண்ணி, ''இதுதான்பா கம்பி எண்ணுவது...'' என்று தன் மகனிடம் சொல்ல, ''அப்பா, எதுக்கு உன்னை சிறையில போட்டாங்க?'' என்று கேட்டான் சமரன். ''போராட்டம் நடத்தினதுக்காக...'' என்று மட்டும் சொன்னார். ''போராட்டம் நடத்தினாக்கூடவா சிறையில போடுவாங்க..?'' என்று பதில் கேள்வி எழுப்பினான். அதற்கு அவரிடம் பதில் இல்லை.

தியாகுவின் ஜெயில் நினைவுகள்!
அடுத்து ஸ்பெஷல் யார்டு--2 பகுதிக்குப் போனார் தியாகு. 'உயர் பாதுகாப்புத் தொகுதி' என்ற எழுத்து களோடு வரவேற்றது அந்தப் பகுதி. கீழே நான்கு அறைகள், மேலே நான்கு அறைகள் கொண்ட பிளாக் அது.
''ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து என்னை இங்கே மாற்றினார்கள். 77-ம் ஆண்டுக்குப் பிறகு இங்குதான் இருந்தேன். இது தனிமைச் சிறை. யாரோடும் பேச முடியாது. வாரத்தில் ஒரு நாள் நேர்காணல் நடக்கும் சமயத்தில்தான் வெளியே வர முடியும். மற்ற நேரங்களில் சிறைக்குள்தான்...'' என்றவரிடம்,
''எப்படி பொழுது போனது?'' என்றோம்.
''பிரபல எழுத்தாளர்கள் கார்ல் மார்க்ஸ், லெனின் ஆகியோர் எழுதிய நிறையப் புத்தகங்களைப் படித்தேன். 'மூலதனம்' நூலை இங்குதான் மொழிபெயர்த்தேன். இப்போது நீதிபதியாகஇருக்கும் சந்துரு, வழக்கறிஞராக இருக்கும்போதே என் நெருங்கிய நண்பர். வாரம் ஒரு முறை என்னைப் பார்க்க வரும்போது, புத்தகங்கள் கொண்டு வருவார். தம்பி, பிரபாகரன்கூட இங்குதான் அடைக்கப்பட்டிருந்தார்!'' என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த அறையைக் காட்டினார். தியாகுவை அங்கு வைத்துப் படம் எடுத்தபோது விஷயம் தெரிந்து, கூட்டம் அந்த அறையை மொய்த்தது.
''பாண்டி பஜார் துப்பாக்கி சூடு சம்பவத்துக்குப் பிறகு பிரபாகரனை இங்குதான் அடைத்து வைத்திருந்தார்கள். பகலிலும்கூட உள்ளேதான் இருப்பார். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். 'எங்கள் நாட்டில் பிரச்னை இருந்தால்

தியாகுவின் ஜெயில் நினைவுகள்!
போராடுவோம். இங்கே எப்படியிருந்தாலும் கவலையில்லை!' என்று சொன்னார் பிரபாகரன். அவரைப் பார்க்க நெடுமாறன் வந்த நேரத்தில் பிரபாகரன் அறையைவிட்டு வந்தார். அப்போது அவரைப் பார்த்திருக்கிறேன்...'' என்றவர் சற்றே டிராக் மாறி,
''எம்.ஜி.ஆரை சுட்டதற்காக எம்.ஆர்.ராதா இங்கே அடைக்கப்பட்டார். ம.த.கூ. பிளாக்கில்தான் அவர் இருந்தார். அப்போது அவரிடம் பேசியிருக்கிறேன். மார்க்ஸியம், மாவோ, லெனின் பற்றி எல்லாம் ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர் சமைத்துச் சாப்பிடுவதற்கு அனுமதி கொடுத்திருந்தார்கள். சமைத்த உணவைத் தூக்கு தண்டனைக் கைதிகளுக்குக் கொடுப்பார்...'' என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தார்.
'மீண்டும் வருக... புழல் ஜெயில் உங்களை அரவணைக்கக் காத்திருக்கிறது' என்று குறும்புக்காரக் கைதியின் கைவண்ணம் சுவரில் கரிக்கோடுகளில் சிரித்தது!
அடுத்த பகுதிக்குள் நுழைந்தோம். ''நயினார் முகம்மது என்பவர் திருவனந்தபுரத்துக்குத் தங்கம் கடத்தியதாக இங்கே அடைக்கப்பட்டார். எப்போதும் அவருக்குத் தற்கொலை எண்ணம்தான்... ஒரு சமயம் பிளேடால் தன்னுடைய விதைகளை அறுத்துக்கொண்டார். உடனே, மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றினார்கள். அந்த சமயத்தில், 'அவரைத் தனிமைச் சிறையில் அடைக்கக் கூடாது' என்று போராடிக்கொண்டிருந்தேன். உடனே, நயினார் முகம்மதுவை என் அறையில் தங்க வைத்தார்கள். 'நீங்கள்தான் சிறைக்குள் அஞ்சாதவராக இருக்கிறீர்கள். அதனால் அவரை நீங்கள்தான் மாற்றவேண்டும்...' என்று ஜெயில் அதிகாரி கேட்டுக்கொண்டார்...'' என்று சொல்லிக்கொண்டே வந்துசேர்ந்த இடம் மிசா பிளாக்.

தியாகுவின் ஜெயில் நினைவுகள்!
''மிசா நெருக்கடிகள் நடந்த நேரத்தில் நான் இங்கு இல்லை. இங்குதான் சிட்டிபாபு, மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் மிசாவின் கொடுமைக்கு ஆளானார்கள்...'' என்றபடியே சிறைப் பயணத்தை முடித்துக் கொண்டு வாசலுக்கு நடந்த தியாகு, ''வெளியுலகமே தெரியாத உலகம்தான் சிறைச்சாலை. ஆனால், இந்த சிறைச்சாலையில் மட்டும் வெளியுலகைப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. சிறைச்சாலையைச் சுற்றி ஓடும் கூவம், தடதட ரயில் சத்தம், மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் மூர்மார்க்கெட், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மணிக்கூண்டு என்று புற உலகத்தைப் பார்ப்பது மட்டும்தான் இங்கே ஆறுதலான விஷயம்!'' என்றார்.
- எம்.பரக்கத் அலி
படங்கள் என்.விவேக்


கட்டுரை லிங்க்https://www.vikatan.com/news/crime/49297--2

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி